Published : 04 Oct 2022 06:16 AM
Last Updated : 04 Oct 2022 06:16 AM

108 வைணவ திவ்ய தேச உலா 17 | திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில்

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன் 

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் ஆகும். 108 வைணவ தலங்களில் வடக்கே திருவேங்கடம் என்றும், தெற்கே திருமாலிருஞ்சோலைமலை என்றும், திருவரங்கம் மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரம் கீழை வீடு என்றும் அழைக்கப்படுகிறது.

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களா சாசனம் செய்துள்ளனர்.

பெரியாழ்வார் பாசுரம்:

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை

அல்லி மாத ரமரும் திரு மார்பினன்

கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம்

சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.

மூலவர்: நீலமேகப்பெருமாள்.

உற்சவர்: சவுரிராஜப்பெருமாள்.

தாயார்: கண்ணபுரநாயகி.

தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி

தலவரலாறு

பொதுவாக கோயில்களை நிர்மாணிப்பதும் நிர்வாகம் செய்ய இறையிலியாக நிலங்களை மானியமாய் அளித்து செலவினங்களுக்கான வருவாய்க்கு வழிசெய்வதும் மன்னர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். இதற்கு நன்றியாக இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னர்களை மதித்து மரியாதை செய்துவந்தனர் கோயில் நிர்வாகிகள். இறைவனுக்கு அணிவித்த மாலையை மன்னனுக்களித்து மரியாதை செய்வர்.

கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உற்சவருக்கு அணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட போது, மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டார்.

மன்னன் இதை நம்ப மறுத்து நேராகக் கோயிலுக்குச் சென்றான். உற்சவருடைய தலையிலிருந்த நீண்ட குழற்கற்றையைக் கண்டான். அது உண்மையான முடியா என்றறிய தலையிலிருந்து ஒரு முடியை எடுத்துக் காண்பிக்குமாறு அர்ச்சகரைக் கேட்டான்.
அவரும் ஒரு முடியைப் பிடித்திழுக்க அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டுத் தெறித்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தன் தவறை உணர்ந்தான்.

திருக்கடவூரில் அபிராம பட்டருக்கு அமாவாசையை பௌர்ணமியாகத் திகழச் செய்த இறைவனின்அருளுக்கு ஒப்ப, இங்கும் அர்ச்சகர் இயலாமைக்கு இரக்கப்பட்டு திருமால் சவுரி முடியுடன் காட்சி தந்தார். அன்று முதல் உற்சவருக்கு தலையலங்காரம் சவுரிமுடியுடன் தான், பெயரும் சவுரிராஜப் பெருமாள் என்று வழங்கப்படலாயிற்று.

இத்தலத்தில் உள்ள உற்சவர் ‘சவுரிராஜப் பெருமாள்’ என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி' என்றும், ‘அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

7 அடுக்குகளைக் கொண்டது சவுரிராஜப் பெருமாள் கோயிலின் ராஜ கோபுரம். கருவறை மூலவர் ‘நீலமேகப் பெருமாள் ‘ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் ‘கண்ணபுர நாயகி‘ தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றாள்.

கிருஷ்ணாபுரம் அன்று அழைக்கப்பட்ட இவ்வூரானது பின்னர் திருக்கண்ணபுரம் என்ற பெயர் பெற்று விளங்குகிறது.

(திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கவித்தலம் மற்றும் திருக்கோவலூர் ஆகிய ஐந்து தலங்களும் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்கள் என்றே போற்றப்படுகின்றன.)

க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.

ராவண வதம் முடிந்தபின் அயோத்தி திரும்பும் ராமபிரானைப் பிரிய மனமில்லாது வருந்திய விபீஷணனுக்கு ராமபிரான் தன் நடை அழகைக்காட்டி அருள் செய்த தலம் இத்திருக்கண்ணபுரம் . இதை நிறுவுவதுபோல் இக்கோயிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சந்நிதி உள்ளது. ராமானுஜருக்கும் தனிக்கோயில் உள்ளது.

அரக்கர் தொல்லையிலிருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்ட முனிவர்களுக்காக பெருமாள் தன் சக்ராயுதத்தைப் பிரயோகித்து’வீகடாக்ஷன்’ என்ற அசுரனை அழித்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் வலக்கரத்தை நீட்டி சக்ராயுதத்தை வீசுவதுபோல் காட்சி தருவது மற்றொரு விசேஷம்.

முனையதரையன் என்ற பக்தன் ஒருவன் இரவு தான் உண்ணக் கையில் எடுத்த பொங்கலின் நறுமணத்தை வியந்து, இது இறைவன் சுவைக்க வேண்டிய பொங்கல் என்று எண்ணிய மாத்திரத்தில் மானசீகமாக அவனால் அது இறைவனுக்கு நிவேதனம் ஆயிற்று.

அடுத்த நாள் காலையில் இறைவன் மேனியில் முந்தைய நாளின் மானசீகமாய் நிவேதனமான பொங்கல் நெய்யோடு வழிந்திருப்பது கண்டு மக்கள் திகைத்ததுடன் அன்று முதல் தினமும் அர்த்தசாம பூஜையின் போது இந்த பக்தன் செய்து தரும் பொங்கலையே நிவேதனம் செய்ய ஏற்பாடாயிற்று.

தமிழ்க் குடும்பங்களில் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டு பாடும் தாய்மார்கள் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டைத்தான் பாடுவார்கள் ‘மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே‘ என்று தொடங்கி 10 பாசுரம் பாடியுள்ள குலசேகர ஆழ்வார் இத்திருத்தலத்து பெருமாளைத்தான் தாலாட்டிப் பாடியுள்ளார். ‘சிலைவலவா சேவகனே‘ என்றும், ‘ஏ மருவும் சிலை வலவா‘ என்றும் ‘ஏ வரி வெஞ்சிலை வலவா‘ என்றும் ராமபிரான் வில்லாற்றலைத்தான் புகழ்ந்து பாடுகிறார்.

கண்ணனைக் குழந்தையாகவும் தன்னை யசோதையாகவும் பாவித்து கண்ணனை சீராட்டி, நீராட்டி தாலாட்டிப் பெரியாழ்வார் பாடும் பாசுரங்கள்தாம் பிற்காலப் பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கியத்துக்கு வித்திட்டது. பிள்ளைத்தமிழில் கூறப்படும் 10 பருவங்களில் செங்கீரைப் பருவம் தவழ்ந்துவரும் குழந்தை தலை நிமிர்த்தி முன்னும் பின்னும் ஆடும் அழகைப் பாடுவதாகும். பெரியாழ்வாரும் இத்தலத்து இறைவனை அழைத்து,

‘கண்ணபுரத்தமுதே ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே‘ என்று பாடுகிறார்.

பூலோக வைகுந்தம்

திருமால் இத்தலத்தில் எட்டு அக்ஷரங்களிலும் உருக்கொண்டு உறையும் தலமாதலால் ‘அக்ஷ்டாக்ஷர மகா மந்திர ஸித்தி ஷேத்திரம்‘ என்று பேசப்படுகிறது. பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு சொர்க்க வாசல் தனியாகக் கிடையாது.

திருவிழாக்கள்

15 கிமீ தூரத்திலுள்ள திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் பெருமாளைத் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து தீர்த்தவாரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசிமாதத்தில் பிரம்மோதற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மாதப் பிறப்பு, ஏகாதசி மாதத்தில் இரண்டு நாட்களில் திருமஞ்சனமும் உற்சவர் புறப்பாடும் உண்டு. இத்தலத்து அமாவாசை உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று. விபீஷணனுக்கு பெருமாள் தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தது ஒரு அமாவாசை நாளில் என்பதை நினைவுகூரும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் திருமஞ்சனம் செய்து சவுரிமுடி அணிவித்து உற்சவர் புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார் இத்தல பெருமாள்.

அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து திருப்புகலூருக்கு சென்று அங்குள்ள ஆற்றைக் கடந்து 1.5 கிமீ தூரம் நடந்து இத்தலத்துக்குச் செல்ல வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x