சயன கோலம் நிறைவு

31-ம் நாளில் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர்
31-ம் நாளில் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர்
Updated on
1 min read

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 31-ம் நாளில் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்தி வரதர் விழாவில் சயனகோலம் நிறைவு பெற்றது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அத்தி வரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். மிக முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் வந்த அவரை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வரவேற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. வைகைச் செல்வன், மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னால் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியும் தனியாக வந்து அத்தி வரதரை தரிசனம் செய்தார்.

கடந்த 1979-ம் ஆண்டு எந்த பீடத்தின் மீது அத்தி வரதர் நிறுத்தப்பட்டாரோ அதே பீடத்தின் மீது அத்தி வரதரை நிறுத்தும் பணிகள் நடைபெற்றன. இந்த 31 நாட்களில் முதல் ஒரு வாரம் மட்டுமே பக்தர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வந்தனர். அதன் பின்னர் சராசரியாக 2 லட்சம் பக்தர்கள் தினம்தோறும் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர்.

நின்றகோலத்தில் இருக்கும் அத்தி வரதரை தரிசிக்க கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 2,500 போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் நிற்பதைத் தடுக்க அவர்கள் தங்கிச் செல்லும் இடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அத்தி வரதர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் புதுப்பிப்பு

அனந்த சரஸ் திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டிருந்தார். அந்த மண்டபம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த மண்டபத்தின் கோபுரத்துக்கு புதிதாக வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in