Last Updated : 26 Jun, 2014 12:00 AM

 

Published : 26 Jun 2014 12:00 AM
Last Updated : 26 Jun 2014 12:00 AM

ஒரு மரத்தின் இரு பறவைகள்

இரண்டு பறவைகள். அவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள். அழகிய சிறகுகள் கொண்ட அந்த இரு பறவைகளும் ஒரே மரத்தில் வசிக்கின்றன. ஒரு பறவை அந்த மரத்திலுள்ள பழங்களைச் சுவைக்கிறது. கசப்பும் இனிப்பும் துவர்ப்புமான பழங்களைத் தேடித்தேடிச் சுவைக்கிறது.

இன்னொரு பறவையோ சாப்பிடாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்கிறது. சாப்பிடாமல் இருக்கும் பறவை ஒளி பொருந்தியதாக இருக்கிறது.

சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பறவை சில சமயம் தன் நண்பனைப் பார்க்கிறது. அது ஏன் சாப்பிடாமல் இருக்கிறது? சாப்பிடாமலேயே அது எப்படி மகிழ்ச்சியோடு இருக்கிறது? அதன் உடலில் மட்டும் ஏன் அப்படி ஒரு ஒளி?

கசப்பும் இனிப்பும் துவர்ப்பும்

இந்தச் சிந்தனைகள் எல்லாம் சாப்பிடும் பறவைக்கு வருகின்றன. ஆனால் சில கணங்கள்தான். அதன் மனம் மீண்டும் பழங்களை நாடுகிறது. கசப்புப் பழத்தைச் சுவைத்துவிட்டால் முகத்தைச் சுளித்துக்கொண்டு இனிப்புப் பழங்களை நாடிச் செல்கிறது. இனிப்புப் பழம் கிடைத்ததும் அந்த இனிப்பை ரசித்துச் சாப்பிட்டுவிட்டு மேலும் இனிப்புப் பழம் கிடைக்குமா என்று பார்க்கிறது. இனிப்பைத் தேடிச் செல்லும்போது சில சமயம் துவர்ப்புப் பழமும் கசப்புப் பழமும் கிடைக்கிறது. அவற்றைச் சாப்பிட்டுவிட்டு எரிச்சலும் கசப்புணர்வும் கொள்ளும் அந்தப் பறவை மீண்டும் இனிப்புப் பழங்களைத் தேடிச் செல்கிறது.

மிக விசாலமான அந்த மரத்தில் மேலும் கீழும் இடமும் வலமும் பறந்து பறந்து கிளை கிளையாக அமர்ந்து ஒவ்வொரு பழத்தையும் அது சாப்பிட்டுப் பார்க்கிறது. கசப்பு, துவர்ப்பு, இனிப்பு எனப் பல விதமான பழங்களை அது சாப்பிடுகிறது. அந்தச் சுவைகளுக்கு ஏற்ப அதன் அனுபவம் மாறுகிறது. உணர்ச்சி மாறுகிறது. மனநிலை மாறுகிறது.

மகிழ்ச்சியும் சலிப்பும் வருத்தமும் மாறி மாறித் தோன்றுகின்றன.

சும்மா இருக்கும் பறவை

இவற்றுக்கு நடுவில் அதன் பார்வை சில சமயம் தன் நண்பனை நாடுகிறது. அது ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறது. இது என்ன செய்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அது பற்றி எந்தக் கருத்தும் சொல்வதில்லை. முகத்தில் பேரானந்தமும் அமைதியும் காணப்படுகின்றன.

பழங்களைத் தேடிச் செல்லும் பறவையால் தன் நண்பனின் நிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதைப்

பார்க்கப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஈர்ப்பாக இருக்கிறது. ஆனால் சில கணங்கள்தான். மீண்டும் பழங்கள் இந்தப் பறவையை ஈர்க்கின்றன. மீண்டும் ஒவ்வொரு பழமாகக் கொத்தித் தின்னச் செல்கிறது.

மீண்டும் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு. மீண்டும் வருத்தம், சலிப்பு, மகிழ்ச்சி.

திடீரென்று ஒரு தருணத்தில் இந்தப் பறவை தன் நண்பன்பால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கிச் செல்கிறது. அதன் அமைதியை ரசிக்கிறது. அதன் ஆனந்தத்தில் ஈர்க்கப்படுகிறது. அந்த ஈர்ப்பில் கரையும்போது பழங்களின் நினைப்பு அதற்கு வரவில்லை. அருகில் நெருங்கிப் பார்க்கும்போது அந்த அமைதி இந்தப் பறவைமீதும் படர்கிறது.

ஆனந்த நிலை

மேலும் நெருங்கிச் செல்கிறது. நெருங்க நெருங்க அதன் ஈர்ப்பு கூடிக்கொண்டே போகிறது. பழங்களின் நினைப்பு வரவில்லை. மனம் ஆனந்த நிலையை அடைகிறது.

நெருங்கி, நெருங்கி மிக அருகில் செல்கிறது. அந்தப் பறவை ஆனந்த நிலை மாறாமல் அமைதியும் கம்பீரமும் கொண்டு வீற்றிருக்கிறது. அதன் ஈர்ப்பில் இந்தப் பறவை மெல்ல மெல்லக் கரைகிறது. அந்தப் பறவையின் சன்னிதியில் தன் தனித்தன்மையை இழக்கிறது.

அந்தப் பறவை வேறு யாருமல்ல, அது தானேதான் என்பதை உணர்கிறது.

இப்போது அங்கே ஒரே ஒரு பறவைதான் இருக்கிறது. அந்தப் பறவை ஆனந்தமாகவும் அமைதியாகவும் வீற்றிருக்கிறது. பழங்கள் பற்றிய நினைப்பு அந்தப் பறவைக்கு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x