Last Updated : 24 Dec, 2015 01:05 PM

 

Published : 24 Dec 2015 01:05 PM
Last Updated : 24 Dec 2015 01:05 PM

மிலாது நபி சிறப்புக் கட்டுரை: நபிகளாரின் திருச்செய்தி

ரோமப் பேரரசர் ஹெர்குலஸ், நபிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அக்காலகட்டத்தில் மக்கத்து குறைஷி பிரமுகர் அபூ சுப்யானையும், அவரது தோழர் சிலரையும் தற்செயலாகச் சந்தித்தார்.

அபூ சுப்யானை நோக்கி ஹெர்குலஸ் கேட்டார். “முஹம்மது என்னதான் போதிக்கிறார்?”

நபிகளாரிடம் கடும் விரோதம் பாராட்டி வந்தார் அபூ சுப்யான். ஆனாலும், நபிகளார் குறித்து நேர்மையான முறையில்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது.

“ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள். வானங்களிலும், பூமியிலும் இறைவனின் ஆட்சியே நடக்கிறது. சர்வ லோகங்களிலும் அவனுடைய ராஜாங்கமே நடக்கிறது. இந்த அதிகாரத்திலும், நிர்வாக அமைப்பிலும் அவன் யாரையும் இணை, துணையாக வைத்துக்கொள்ளவில்லை. இறைவனின் சக்திக்கு நிகர் வேறு சக்தியில்லை. யதார்த்தம் இதுவாக இருக்கும்போது, மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே தலை தாழ்த்தி வணங்கிட வேண்டும். அவன் மீதே அன்பு வைக்க வேண்டும். இறைவனுக்கு அடிபணிவதிலும், இறைவனை வணங்குவதிலும், இறைவனின் மேலாதிக்கத்திலும் எவரையும் இணை வைக்கக் கூடாது. எல்லாவற்றுக்காகவும் இறைவனிடமே உதவி கேட்க வேண்டும். தொழ வேண்டும்” என்று நபிகள் உரைப்பதை எடுத்துச் சொன்னார்.

நபிகளாரின் அழைப்பு, அன்னார் கொண்டு வந்த திருச்செய்தியின் உள்ளடக்கம் இதுதான்! ‘அம்ரு இப்னு அபஸா’ என்பது அந்த நபித் தோழரின் பெயர். இவர் நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த தொடக்கக் காலத்தில் நபிகளாரை மக்கா நகரில் சந்தித்தார். அப்போது அவருக்கும் நபிகளாருக்கும் நடந்த உரையாடல் இது:

“நீங்கள் யார்?”

“நான் இறைவனின் தூதராவேன்!”

“… இறைத் தூதர் என்றால்…?”

“இறைவன் என்னைத் தனது தூதராக.. அனுப்பியுள்ளான்!”

“என்ன செய்தியுடன் இறைவன் உங்களை அனுப்பியுள்ளான்?”

நபிகளார் தமது வருகையின் நோக்கத்தை வாய்பட ரத்தினச் சுருக்கமாக சொன்னது இது.

இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்த வேண்டும். அந்த உறவு சரியான அடிப்படைகள் மீது நிறுவ வேண்டும்.

மனிதர்களுக்கிடையிலான சரியான தொடர்பின் அடிப்படைகள் பரஸ்பர அனுதாபமும், பரிவும், இரக்கமுமேயாகும். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள். ரத்த பந்த உறவு முறையினர். அதனால், ஒருவர் மற்றொருவரிடம் பரிவுடனும், இரக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். ஒருவர் அநீதிக்கு ஆளாகும்போது, அனைவரும் அநீதி இழைக்கப்படுபவருக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழ வேண்டும். ஆபத்தில் சிக்கிக் கொண்டோரை ஓடோடிச் சென்று காக்க வேண்டும்.

நபிகளாருக்கு முன் எல்லா இறைத் தூதர்களும் இந்த அடிப்படைச் செய்திகளைத்தான் சொன்னார்கள்.

முகீரா பின் ஷீஃபா மற்றொரு நபித் தோழர்.ஒருமுறை, பாரசீகத்து தளபதி ருஸ்தூமுடன் நடந்த உரையாடலில் சொன்னார்:

“அய்யா! நாங்கள் வணிகர்கள் அல்ல. வணிகத்துக்கான புதிய புதிய சந்தைகளைத் தேடிக்கொண்டிருப்பதற்கு! அது எங்கள் நோக்கமும் அல்ல; எங்கள் இலக்கும் அல்ல. எங்களது நோக்கமும், குறிக்கோளும் மறு உலகம்தான்! நாங்கள் இறைவனின் கட்டளைகளான இஸ்லாத்தின் கொடியைத் தோளில் சுமந்து நிற்பவர்கள். அந்த வாழ்க்கையின் பக்கம் மக்களை அழைப்பதே எங்கள் குறிக்கோள். வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதும், முஹம்மது நபிகளார் இறைவனின் திருத்தூதர் என்று சான்று பகர்வதும் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனிதன் தன்னைப் போன்ற சக மனிதனுக்கு அடிபணிவதிலிருந்து அவனை விடுத்து இறைவனுக்கு அடிபணிந்து வாழச் செய்ய வேண்டும் என்பதும் இந்த வாழ்க்கை நெறியின் அறிவுரையாகும்!”

இதைக் கேட்ட பாரசீகத் தளபதி வியந்து சொன்னார்:

“நல்ல அறிவுரைதான்! இன்னும் என்ன சொல்கிறது உங்கள் மார்க்கம்?”

அதற்கு நபித் தோழர் முகீரா பதிலளித்தார்:

“மனிதர்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்களே! அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்பதும் அந்த அறநெறியின் போதனைகளாகும்”

இவை நபிகளார் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் இறைநெறியின் அடிப்படை செய்திகளில் சில. எவர் விரும்புகின்றாரோ அவரை மனிதர்களின் அடிமைப்படும் தளைகளிலிருந்து விடுவித்து இறைவனுக்கு, எங்கும் வியாபித்திருக்கும் அந்தப் பரம்பொருளுக்கு அடிபணியும் வாழ்க்கை நெறிக்கு அழைத்துச் செல்லும் திருப்பணி இது.

l படைத்தவனின் கட்டளைப்படி மனித குலத்தை வாழ அழைப்பதே நபிகளாரின் திருச் செய்தியாகும்.

l சொல்லாலும், செயலாலும் வாய்மையுடன் வாழ வேண்டும்.

l ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தையும், கற்பையும் பேணி வாழ வேண்டும்.

l சக மனிதர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

l மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களே! ரத்த உறவு முறைகளே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x