Last Updated : 26 Nov, 2015 10:58 AM

 

Published : 26 Nov 2015 10:58 AM
Last Updated : 26 Nov 2015 10:58 AM

நபிகள் வாழ்வில்: கண்ணீர் விட்ட ஒட்டகம்

மதீனா மாநகரத்தைச் சுற்றியும் அடர்த்தியான பேரீச்சைத் தோட்டங்கள். சூரிய ஒளி ஊடுருவ முடியாதவாறு பசுங்குடையாய் படர்ந்திருந்தது நிழல். வெய்யிலின் வெம்மை தெரியாது. வெம்மையான பகல் பொழுதிலும் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்.

மதீனாவாசிகள், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள இத்தகைய மரத் தோட்ட நிழலில் களைப்பாறுவார்கள். நேரம் போவதே தெரியாமல் பேசி மகிழ்வார்கள்.

ஒருநாள், நபிகளார் அவ்வழியே சென்றார். வழியிலிருந்த தோட்டத்தில் நுழைந்தார்.

தோட்டத்தின் ஒரு மூலையில் ஓர் ஒட்டகம் நின்றிருந்தது. அதை நபிகளார் கண்டார்.

ஒட்டகம் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது. அதனிடமிருந்து பரிதாபமான முனகல் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நபிகளார் ஒட்டகத்தின் அருகே சென்றார்.

ஒட்டகத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அதன் முகத்தில், தாரைத்தாரையாக ஈரக் கோடுகள் படிந்திருந்தன. எலும்பும் தோலுமாய் ஒட்டகம் மெலிந்து காணப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்டதும், நபிகளாரின் மனம் பதறிவிட்டது. ஒட்டகத்தின் நிலைமை அவரைக் கலங்கடித்தது.

நபிகளார் ஒட்டகத்தைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார். அதன் கண்ணீரைத் துடைத்து விட்டார். அந்த இதமான வருடல் ஒட்டகத்திடம் அமைதியை ஏற்படுத்தியது. முனகலும் நின்று போனது. நபிகளார், தோட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தார். இதன் உரிமையாளர் யார் என்று விசாரித்தார்.

அதைக் கேட்டு ஒட்டகத்தின் உரிமையாளர் நபிகளாரிடம் ஓடோடி வந்தார். ஒட்டகம் சரியான பராமரிப்பு இல்லாமல் மெலிந்திருப்பதையும், அதிகப் பணிச்சுமை தாங்காமல் பலவீனமாகிவிட்டதையும் அந்த உரிமையாளரிடம் சுட்டிக்காட்டினார்.

“இந்த வாயில்லாத ஜீவனான ஒட்டகத்தின் விஷயத்தில் இறைவனின் பயம் உமக்கு ஏற்படவில்லையா?” என்று கேட்டார்.

கடைசியில், ஒட்டகத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அதன் உரிமையாளரிடம் நபிகளார் அறிவுறுத்தினார். அவரும் தனது தனது தவறைப் புரிந்து கொண்டார்.

எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டு என்பதை நபிகளார் செயலுருவமாகச் செய்து காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x