Last Updated : 22 Jan, 2021 09:48 PM

1  

Published : 22 Jan 2021 09:48 PM
Last Updated : 22 Jan 2021 09:48 PM

சகல வெற்றிகளும் தரும் பிள்ளையார் மந்திரம்! 

பூஜையில் முதலிடம் வகிப்பவர் கணபதி பெருமான். எந்தத் தெய்வத்தை நினைத்து பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாருக்குத்தான் பூஜைகள் செய்வோம். எந்தக் கடவுளுக்கு ஹோமங்கள் செய்தாலும் முதலில் பிள்ளையாரை அழைத்து அமரவைத்துத்தான் நம் ஹோம பூஜைகளை மேற்கொள்வோம்.

அதேபோல், பிள்ளையார் சிலை இருக்க வேண்டும் என்பதெல்லாம் கூட இல்லை. ஒரு மஞ்சளில் கூட பிள்ளையாராக பாவித்து பிடித்து வைத்து பூக்களால் அர்ச்சித்து வழிபட்டாலே, அந்த பூஜையில் கணபதி பெருமான் வந்து அமர்ந்து கொள்வதாகவும் அந்த ஹோமமோ பூஜையோ நிறைவுற நடப்பதற்கு அவரே உறுதுணையாக இருப்பார் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.

கணங்களின் நாயகன் விநாயகர். அதனால்தான் கணபதி என்றே திருநாமம் அமைந்தது. நம் விக்னங்களையெல்லாம் தீர்த்தருளுபவர் பிள்ளையார். அதனால்தான் விக்னேஷ் எனும் திருநாமம் அவருக்கு அமைந்தது.

எந்தவொரு விஷயத்தை எழுதினாலும் அதில் முதலாவதாக பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டுத்தான் எழுதுவோம். இப்படியாக நாம் செய்யும் எல்லாச் செயலும் பிள்ளையாரை முதன்மைப்படுத்தியே இருக்கின்றன. பிள்ளையாருக்கு முதல் வணக்கம் செய்த பின்னரே அடுத்தடுத்த வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இதனால்தான் முதல் வணக்கம் முதல்வனுக்கே என்று விநாயகரைப் போற்றுகிறோம். கொண்டாடுகிறோம். வழிபடுகிறோம். ஆலயங்களில் கூட, உள்ளே நுழைந்ததும் நாம் வணங்குகிற முதல் தெய்வம், முதல் கடவுள் விநாயகப் பெருமானாகத்தான் அமைந்திருக்கிறார்.

வாழ்வில் எந்த சிக்கல்கள் ஏற்பட்டாலும் கவலைகள் வந்து அழுத்தினாலும் துக்கமும் துயரமும் கொண்டு வருந்தினாலும் பிள்ளையாரை மனதார வழிபட்டால், சகல சிக்கல்களையும் போக்கித் தருவார் கணபதி. துக்கங்களையும் துயரங்களையும் நீக்கியருளுவார். வேதனைகளைக் காணாமல் போக்குவார் ஆனைமுகன்.

தினமும் காலையில் விநாயகரின் அற்புதமான இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

என்கிற மந்திரத்தைச் சொல்லிவாருங்கள். முடியும்போதெல்லாம் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.

நம் விக்னங்களையெல்லாம் போக்கி அருளுவார் பிள்ளையாரப்பன். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் ஆனைமுகத்தான். சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், பிள்ளையாருக்கு சுண்டல், கொழுக்கட்டை, பாயசம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். அந்தநாளில், தெரு முச்சந்தியில் சிதறுகாய் உடைத்து வேண்டிக்கொள்ளுங்கள். திருஷ்டியெல்லாம் கழியும். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x