Last Updated : 29 Dec, 2020 09:16 PM

1  

Published : 29 Dec 2020 09:16 PM
Last Updated : 29 Dec 2020 09:16 PM

சிதம்பர பெருமைகள்! 

வைஷ்ணவத்தில், கோயில் என்றால் ஸ்ரீரங்கத்தைச் சொல்லுவார்கள். அதேபோல, சைவத்தில் கோயில் என்றாலே சொல்லப்படும் திருத்தலம் சிதம்பரம். பெருமை மிக்க திருத்தலம். ஆடல்வல்லான் என்று அழைக்கப்படும் நடராஜ பெருமான் சிவகாமி அன்னையுடன் குடிகொண்டிருக்கும் தலம் இது.

தில்லை என்றும் தில்லையம்பதி என்றும் போற்றப்படுகிறது சிதம்பரம். தில்லை எனும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் தில்லையம்பதி என அழைக்கப்பட்டது.
புலிக்கால் முனிவர் என்ற வியாக்ரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என ஸ்தல புராணம் விவரிக்கிறது. அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகிறான்.

இரண்டு முனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை எனப்படுகிறது. இதுவே ’திருச்சிற்றம்பலம்’ என்பதாக விவரிக்கின்றன புராணங்கள். இங்குதான் நடராஜர் பெருமான் எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. சிறு அம்பலம் என்பதே சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- என்றால் வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் விளக்கியுள்ளது.

அந்த ஆன்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் உணர்த்துகினன. அந்தச் சிறு வெளியை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் என்றால் சிறுமை. ஆகாயம் என்பது வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்தார் என்கிறது ஸ்தல புராணம்!

எல்லா சிவாலயத்திலும் கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் ஆகியோரை தரிசிக்கலாம். ஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார்.

இறைவன் உயிர்களுக்காக ஒன்பது விதமான வடிவங்கள் எடுக்கிறான். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம் என்பன அவை. இந்த நிலையை ’நவந்தரு பேதம்’ என சைவ சித்தாந்த நூல்கள் விளக்குகின்றன. இந்த ஒன்பது வடிவங்களுக்கும் மேலான நிலைதான் மகா சதாசிவ தாண்டவேஸ்வரர்! இந்த வடிவில்தான் சிதம்பரத்தில் அருள்பாலிக்கிறார் இறைவன்.

நடராஜரின் வழிபாட்டின் போது ‘நடராஜர் வருகிறார்’ எனும் கட்டியம் கூறும் மரபு இன்றைக்கும் உள்ளது. எனவே இந்த அடிப்படையிலேயே தில்லை நடராஜப் பெருமான் மூல மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

சாதாரணமாக, கருவறை என்பது ஒரு கலசம் உடையது. கருவறைக்கு அதிஷ்டானம், பாதம், பிரஸ்தாரம், கண்டம், சிகரம், ஸ்தூபி என்று 6 உறுப்புகள் உண்டு. இதிலிருந்து வேறுபடுவது சபை. திருச்சிற்றம்பலம் சபை ஆதலினால் அதற்கு 9 கலசங்கள் உள்ளன. அதில் கண்டம் என்ற உறுப்பு தவிர பிற காணப்படுகின்றன.
திருச்சிற்றம்பலம் மரத்தாலானது. தில்லையில் மட்டுமே 5 சபைகள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் ஆன ராஜசபை, உற்ஸவ மூர்த்திகள் வீற்றிருக்கும் தேவ சபை, நிருத்த சபை, கனக சபை, சித்சபை என்பன.இவை ஐந்தும் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களைக் குறிப்பிடுகின்றன!

சிதம்பரம் திருத்தலம் அதனால்தான் பெருமைமிக்க திருத்தலமாகப் போற்றப்படுகிறது என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x