Published : 14 Nov 2020 07:48 AM
Last Updated : 14 Nov 2020 07:48 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கும்ப ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்துவிட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளை தந்த குருபகவான் இப்போது 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் நுழைகிறார். உங்களுக்கு பணவரவு குறையாது. ஷேர் மூலமும் பணம் வரும். ஆனால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச் செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய நண்பர்களால் உதவியுண்டு. இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் நெடுந்தூரம் பயணிப்பதை தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்ல வேண்டும். நீண்ட நாட்களாக போக நினைத்த புகழ் பெற்ற அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தலைமை தாங்குவீர்கள். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எளிதில் முடித்துவிடலாமென்று நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் அறியாதவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி அந்தரங்க விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பழைய நண்பர்களைச் சந்தித்து பழைய அனுபவங்களை சுகமாக அசைபோடுவீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். பழைய நூல்கள் படிப்பதில் ஆர்வம் பிறக்கும்.

குரு பகவான் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புதுசு வாங்குவீர்கள். குரு ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் மனைவியின் உடல்நிலை பாதிக்கும்.
06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடிக் கொண்டே போகும். சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படக் கூடும். வயிற்றுவலி, சிறுநீரகத் தொற்று, நெஞ்சுவலி வந்து போகும். பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் அலைகழிக்கப்படுவீர்கள். குறுக்குவழியில் செல்ல வேண்டாம். கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்படுவீர்கள். குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ளுங்கள்.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்துக்கு குரு செல்வதால் இளைய சகோதரர் வகையில் உதவியுண்டு. சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், சிறுநீரகத் தொற்று வந்து செல்லும்.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்குள் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் செல்வதால் உணர்ச்சிவசப்படாதீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தள்ளிப் போய் முடியும். பூர்விகச் சொத்துகள் தொடர்பில் இருந்த சிக்கல்கள் தீரும்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களைத் தெரிந்து கொள்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தந்தைவழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்கலாம். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்.

இந்த குரு மாற்றம் புதிய திட்டங்களை நிறைவேற்ற உதவுவதுடன் ஓரளவு வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஏகாம்பரேஸ்வரரையும், தட்சிணாமூர்த்தியையும் சென்று வணங்குங்கள். செலவுகள் சுபச் செலவுகளாக மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x