Last Updated : 08 Oct, 2020 12:59 PM

 

Published : 08 Oct 2020 12:59 PM
Last Updated : 08 Oct 2020 12:59 PM

ஸ்ரீரங்கத்தில் கல்யாண வரம் தரும் காட்டழகிய நரசிம்மர்; கடன் தொல்லை தீர்ப்பார்; எதிர்ப்பை விரட்டுவார்! 

காட்டழகிய நரசிம்மரை, லக்ஷ்மியை மடியில் அமர்த்திக்கொண்டிருக்கும் நரசிம்மரை தொடர்ந்து சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். எதிரிகள் தொல்லையோ எதிர்ப்போ தவிடுபொடியாகும்.

ஸ்ரீரங்கம் எனும் அற்புதமான பூமியில், பள்ளிகொண்ட நிலையில் இருந்தபடி சேவை சாதிக்கிறார் ரங்கநாதப் பெருமாள். இதே ஊரில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அருகிலேயே நமக்கு அருட்கடாட்சம் வழங்கக் காத்துக்கொண்டிருக்கிறார் நரசிங்கப் பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டழகிய சிங்கர் திருக்கோயில். அழகிய ஆலயத்தில் இருந்தபடி, நம்மையெல்லாம் உலக வாழ்க்கைக்குத் தேவையான சத்விஷயங்களை வழங்குவதற்கு கோயில் கொண்டிருக்கிறார் நரசிங்கப் பெருமாள். இங்கே இவரின் திருநாமம் காட்டழகிய சிங்கர்.

சுமார் எட்டடி உயரத்தில் வீற்றிருக்கிறார் நரசிம்மர். அதுமட்டுமா? தன்னுடைய இடது மடியில் மகாலக்ஷ்மி தாயாரை அமர்த்தியபடி, இடது திருக்கரத்தால் தாயாரை வாஞ்சையுடன் அணைத்தபடி, வலது திருக்கரத்தில் அபய ஹஸ்த முத்திரையைக் காட்டியபடி, அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

இங்கே ஆனி மாத சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகளும் விசேஷ அலங்காரங்களும் நடைபெறும். அதேபோல் ஆடி மாதத்தில் நரசிம்மருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவதும் சிறப்பு வாய்ந்தது.

வைகாசி மாதத்தில் நரசிம்ம ஜயந்தித் திருநாள் கோலாகலமாக நடைபெறும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில், ஸ்ரீரங்கம், திருச்சி, லால்குடி, அரியலூர், பெரம்பலூர், திருவெறும்பூர், துவாக்குடி, குளித்தலை, முசிறி முதலான ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாரந்தோறும் வந்து நரசிம்மரை தரிசித்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

சிவனாருக்கு உகந்த விருட்சங்களில் வன்னி மரத்தையும் சொல்லுவார்கள். இங்கே, காட்டழகிய சிங்கர் திருக்கோயிலின் ஸ்தல விருட்சமாக வன்னிமரம் போற்றப்படுகிறது. அதேபோல், ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நன்னாளில், நரசிம்மரை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகரித்தபடியே உள்ளது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது ஒரு பிரதோஷ காலம் என்பதால், பிரதோஷத்தின் போது நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் அமர்க்களப்படுகின்றன.

காட்டழகிய நரசிம்மரை, லக்ஷ்மியை மடியில் அமர்த்திக்கொண்டிருக்கும் நரசிம்மரை தொடர்ந்து சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். எதிரிகள் தொல்லையோ எதிர்ப்போ தவிடுபொடியாகும்.

வீட்டில் சகல சம்பத்துகளையும் தந்தருள்வார் நரசிம்மர். இல்லத்தில் தம்பதி ஒற்றுமையை மேலோங்கச் செய்வார். மனோபலம் தந்தருள்வார் என்று போற்றுகின்றனர்.
ஸ்ரீரங்கம் காட்டழகிய நரசிம்மரை, பானக நைவேத்தியமோ தயிர் சாத நைவேத்தியமோ செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்காத புகழையும் ஐஸ்வரியத்தையும் பெறுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x