Published : 04 Feb 2020 06:43 PM
Last Updated : 04 Feb 2020 06:43 PM
மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய பெரிய கோயில், வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ஒன்றாகும். இந்த கோயிலுக்கும், கோயிலைக் கட்டிய மாமன்னனுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது தபால் தலையும், நாணயமும் வெளியிடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டு தஞ்சை பெரிய கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதில் தஞ்சை பெரிய கோயிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4-வது ஆளுநரான சர் பெனகல் ராமாராவ் அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ‘ஏ’ ஆகும்.
மத்திய அரசு 1995-ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.
1010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு 2010-வது ஆண்டோடு 1,000-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சை மாநகரில் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 25, 26 ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது. அப்போது பெரிய கோயிலின் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையும், பெரிய கோயில் மற்றும் ராஜராஜனின் உருவம் பொறித்த 1,000 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட்டது.
- வி.சுந்தர்ராஜ்
படவிளக்கம்
1. மத்திய அரசால் கடந்த 1954-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயில் உருவம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்ட 1000 ரூபாய்.
2. தஞ்சை பெரிய கோயில் கட்டிமுடிக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT