Published : 04 Feb 2020 06:26 PM
Last Updated : 04 Feb 2020 06:26 PM

மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்கு சாட்சியாகும் அன்னச் சத்திரங்கள்

ஒரத்தநாட்டில் இன்றும் இயங்கி வரும் சத்திரம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயிலைச் சார்ந்த சத்திரங்களும், தர்ம நிறுவனங்களால் அமைக்கப்பெற்ற சத்திரங்களும் சேர்த்து 694 சத்திரங்கள் இருந்ததாகக் கூறுகிறது கி.பி.1873-ம் ஆண்டின் வருவாய்த் துறை அறிக்கை.

தஞ்சாவூர் பகுதியில் சத்திரங்கள் அமைந்த அளவுக்கு தென்னிந்தியாவிலேயே எந்தப் பகுதியிலும் சத்திரங்கள் இல்லை என்பது, தஞ்சாவூருக்கே உரிய தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். கி.பி.1743-ம் ஆண்டு முதல் 1937-ம் ஆண்டு வரை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள், ராமேசுவரம் செல்லும் பெருவழியில் யாத்ரீகர்கள் தங்குவதற்காகச் சத்திரங்களை நிறுவியுள்ளனர். இந்தச் சத்திரங்கள் மராட்டிய மன்னர்களின் பெயரில் அல்லது அவர்களின் தாய், மனைவி, சகோதரி, ஆசைநாயகிகளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன. சில சத்திரங்கள் குல தெய்வத்தின் பெயரில் அமையப்பட்டுள்ளன.

ராமேசுவரம் வரை யாத்திரை செல்லும் பொதுமக்களும், பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்தச் சத்திரங்களில் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் இரண்டு வேளை உணவு அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் சில இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

சத்திரங்கள் வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் தங்குவோருக்கு வசதியாக விளக்குகள் பொருத்தப் பட்டிருந்தன. ஒவ்வொரு சத்திரத்திலும் உணவு வழங்குவதற்கு ஏதுவாக, அப்பகுதி கிராமங்களில் சில சத்திரத்தின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்தன. அந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் விளையும் தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து சத்திரங்களில் வழங்கப்பட்டு வந்தது.

மராட்டிய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சத்திரங்களில் பல சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும் பல சத்திரங்களின் கட்டிடங்கள் செடிகொடிகள் மண்டிக் காணப்படுகின்றன. இந்தச் சத்திரங்களை நிர்வாகிப்பதற்காக இன்றளவும் சத்திர நிர்வாகம் என்ற தனிப்பிரிவு தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது. தஞ்சாவூர் சத்திர நிர்வாகத்துக்குட்பட்ட பல கிராமங்களில் அவற்றுக்கான நிலங்கள் இன்றும் உள்ளன. இதற்கான குத்தகையை மட்டும் சத்திரங்களின் நிர்வாகம் வசூலித்து வருகிறது.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, நீடாமங்கலம், ராசாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்தன. சத்திரங்களின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து வந்ததால், தற்போது மாணவர் விடுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வடநாட்டிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே அன்னச் சத்திரங்களை கட்டி, பக்தர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர் மராட்டிய மன்னர்கள். அவர்களின் சிறப்பான நிர்வாக முறைக்குச் சாட்சிகளாக இன்றளவும் விளங்குபவை இந்தச் சத்திரங்கள் என்றால் அது மிகையல்ல.

சத்திரங்களின் ஊரும், பெயரும்...

மல்லியம் -இராசா சத்திரம்,

திருபுவனம் -அம்மாச் சத்திரம்,

சக்வாராம்பாள் சத்திரம் ,

தாராசுரம் -இராசாம்பாள்புரம் சத்திரம்

திருவையாறு -வரதப்ப ஐயர் சத்திரம், சீதா சத்திரம், அம்மணிபாய் சத்திரம், துவாதசிக் கட்டளைச் சத்திரம்

நெடார் -நெடார் சத்திரம்

பள்ளியக்ரஹாரம் -லட்சுமிராஜபுரம் சத்திரம்

வெண்ணாறு -வெண்ணாறு சத்திரம்

தஞ்சாவூர் -சிரேஸ் சத்திரம்

சூரக்கோட்டை -இராசகுமராபாய் சத்திரம்

சைதம்பாள்புரம் -சைதம்பாள் சத்திரம்

நீடாமங்கலம்- யமுனாம்பாள் சத்திரம்

ஒரத்தநாடு- முத்தம்பாள் சத்திரம்

சேதுபாவாசத்திரம் -சேதுபாவா சத்திரம்

மகாதேவப்பட்டினம் -மகாதேவப்பட்டினம் சத்திரம்

பட்டுக்கோட்டை -காசாங்குளம் சத்திரம்

இராசாமடம் -மோகனாம்பாள்புரம் சத்திரம்

வேளங்குளம் -அம்மணி சத்திரம்

மணமேல்குடி -திரெளபதாம்பாள்புரம் சத்திரம்

மீமிசல் -இராசகுமாராம்பாள்புரம் சத்திரம்

இராமேசுவரம் -ராமேசுவர சத்திரம்

தனுஷ்கோடி -சேதுக்கரை சத்திரம்

-வி.சுந்தர்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x