Last Updated : 08 May, 2014 12:58 PM

 

Published : 08 May 2014 12:58 PM
Last Updated : 08 May 2014 12:58 PM

மகன் சொன்ன பாடம்

உலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அதைப் போக்கி, தர்மத்தை நிலைநாட்ட மாலவன் அவதாரம் எடுப்பார். அவர் எடுத்த அவதாரங்களில் முக்கியமானது நரசிம்மர் அவதாரம். பொதுவாக பெருமாளின் அவதாரங்கள் அனைத்தும் ஒரு குறிக்கோளுடன் அமைந்து, அதற்குரிய பிறப்புடன் இணைந்திருக்கும். நரசிம்மர் அவதாரமும் குறிக்கோளுடன் வெளிப்பட்டதுதான். ஆனால் பிறப்பு, வளர்ப்பு இல்லாமல் நொடிப்பொழுதில் நிகழ்ந்த அற்புதம் அது. வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில்தான் வைகுண்டவாசன் நரசிம்மராக அவதாரம் எடுத்தார். அந்த நாளைத்தான் பக்தர்கள் நரசிம்ம ஜெயந்தியாக வழிபட்டு மகிழ்கின்றனர். அன்றைய தினம் நரசிம்மரைத் தரிசித்து, வழிபட்டால் பகையை வெல்லலாம் என்பது ஐதீகம்.

நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது எப்படி?

இரண்யகசிபு என்னும் அரக்கன், தம் தம்பியைக் கொன்றதற்காகத் திருமாலைப் பழிவாங்கும் பொருட்டு கடும் தவம் புரிந்தான். மந்திரமலைச் சாரலில் கால் கட்டை விரலில் நின்று, இருகைகளையும் வான் நோக்கிக் கூப்பிடியபடி தவத்தில் ஈடுபட்டான். அவனுடைய தவத்தின் அக்னியைத் தாங்க முடியாமல் உலகத்து உயிர்களெல்லாம் அல்லலுற்றன. தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருமாலிடம் முறையிட்டனர். முக்காலமும் உணர்ந்த பெருமான், உடனே மந்திரமலைச் சாரலுக்குச் சென்றார். அங்கே எறும்புகள் அரித்த தோலும், எலும்புமாகத் தவத்தில் இருந்தான் இரணியன். அவன் மீது கமண்டல நீரைத் தெளித்தார் பெருமாள். தவத்தின் சக்தியால் விளைந்த பொன்மேனியுடன் வெளிப்பட்டான் இரணியன். இறவா வரம் பெற வேண்டும் என்பதே அவன் விருப்பம்.ஆனால் யாருமே இறவா வரம் பெற முடியாது என்பதால் மரணமே நிகழ முடியாதபடி தந்திரமாக வரம் கேட்டான்.தனக்கு பூமியிலோ, வானத்திலோ மரணம் நேரக் கூடாது. இரவிலோ, பகலிலோ, வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ இறப்பு சம்பவிக்கக் கூடாது. மனிதர்கள், தேவர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எந்தவொரு ஆயுத்தத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது என்று தந்திரமாக இறப்பே நிகழாமல் இருக்க வரம் வேண்டிப் பெற்றான் இரணியன். பெருமாளும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.

மகன் சொன்ன பாடம்

அசுரேந்திரத்துக்குத் திருப்பிய இரணியன் தேவர்களை வாட்டி வதைத்தான். மூவுலகிலும் தன்னை வெல்ல ஆளே இல்லை என்ற மமதையில் இருந்தான். அனைவருமே தன் நாமத்தைச் சொல்லும்போது தன் மகன் பிரகலாதன் மட்டும் ஹரியின் நாமத்தை உச்சரிப்பதைக் கேட்டுச் சினமுற்றான். பெருமாளின் பாதங்களைச் சரணடைவதுதான் மோட்சத்துக்கு வழி வகுக்கும் என்று சொன்ன மகன் மீது கோபம் கொண்டான் இரணியன். எங்கே இருக்கிறான் உன் பெருமாள் என்று ஆவேசத்துடன் கேட்டான் இரணியன். பிரகலாதனோ, “அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று அமைதியுடன் சொன்னான்.

அதற்கு இரணியன், “அப்படியென்றால் இந்தத் தூணில் இருக்கிறாரா என்று பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே பிரகலாதன் இறுகப் பற்றியிருந்த தூணை வாளால் குத்தினான். உடனே அண்டமெல்லாம் நடுங்கும்படி பேரொலி கேட்டது. தூணை இரண்டாகப் பிளந்துகொண்டு மனித உடலுடனும், சிங்கத் தலையுடனும் வெளிப்பட்டார் பெருமாள்.

அந்தத் தோற்றம் கண்டு இரணியன் பயந்துவிட்டான். மனித உடலும் இல்லாமல், விலங்கு உருவமும் இல்லாமல் தன்னைக் கொல்வதற்காக பெருமாள் எடுத்த அவதாரம்தான் அது என்பது இரணியனுக்குப் புரிந்துவிட்டது. நரசிம்மரைத் தாக்குவதற்காக நெருங்கினான். நரசிம்மரோ அவனைத் தன் மடியில் கிடத்தி, கூரிய நகங்களால் அவன் வயிற்றைக் கிழித்து வதம் செய்தார்.

இரணியன் வரம் பெற்றது போலவே அவன் மரணமும் நிகழ்ந்தது. அது காலையும் மாலையும் இல்லாத அந்தி நேரம். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில், வானிலும் மண்ணிலும் இல்லாமல் தன் மடியில் இரணியனைக் கிடத்திக் கொன்றார் பெருமாள். மனித உருவும், விலங்கு உருவும் இணைந்த வடிவத்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி தன் கூரிய நகங்களால் அவனை வதம் செய்தார்.

பிறகு கோபம் தணிந்து, லட்சுமி தேவியுடன் லட்சுமி நரசிம்மராகக் காட்சி தந்தார்.

அகோபில தரிசனம்

நரசிம்ம ஜெயந்தியன்று நரசிம்மர் தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த ஆந்திர மாநிலத்தில் உள்ள அகோபிலத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. அங்கே நரசிம்மர் வெளிப்பட்ட தூண், உக்கிர ஸ்தம்பம் என்னும் பெயரில் இருக்கிறது. இரணியன் ஆண்ட இடம், பிரகலாதன் கல்வி கற்ற இடம், நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம் ஆகியவை இங்கே இருப்பதால் நரசிம்ம ஜெயந்தியன்று தரிசிக்க உகந்த இடங்களில் ஒன்றாக அகோபிலம் விளங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x