Published : 29 Jan 2015 02:06 PM
Last Updated : 29 Jan 2015 02:06 PM

விவேகானந்தர் மொழி: நான்கு கொடைகள்

நாம் போதுமான அளவு உணவு அளித்து வந்துள்ளோம். நம்மைவிட அதிகமான ஈகைக்குணம் வாய்ந்த தேசம் எதுவும் இல்லை. பிச்சைக்காரன் கூடத் தனது வீட்டில் சிறு துண்டு ரொட்டி இருக்கிற வரையில் அதில் பாதியை தானம் செய்துவிடுவான். இத்தகைய அதிசயத்தைப் பாரத நாட்டில் மட்டுமே காணமுடியும். உணவு தானம் செய்தது போதும். மற்றுமுள்ள இரண்டு தானங்களாகிய ஆத்மீக ஞானத்தையும் உலகியல் ஞானத்தையும் அளிக்க முற்படுவோம்.

நம்மிடம் வீரமிருந்து நமது உள்ள உறுதி குலையாததாக இருக்குமாயின், பரிபூரண உண்மை உள்ளத்துடன் நாம் இந்த வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைப் பதியவைத்துத் தள்ளுவோமாயின், இருபத்தைந்து ஆண்டுகளில் பிரச்சினை தீர்ந்துவிடும். போராடுவதற்கு எதுவும் எஞ்சியிராது. பாரத தேசம் முழுவதும் மீண்டும் ஒருமுறை ஆரிய பூமியாகிவிடும்.

வியாசரை நான் போற்றி வணங்குகிறேன். மகாபாரதத்தை இயற்றியவரான வேத வியாசர் கூறுகிறார்.

“இந்தக் கலியுகத்தில் அரிய சாதனை ஒன்று இருக்கிறது. மற்ற யுகங்களில் அநுஷ்டிக்கப்பட்டுவந்த தபோ முறைகளும் கடினமான யோக அநுஷ்டானங்களும் இக்காலத்தில் அநுஷ்டிக்கக் கூடியனவாக இல்லை. இக்காலத்தில் நாம் செய்யக்கூடிய உயர்ந்த சாதனை தானதர்மம்தான்.

தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுதல்; அதற்கடுத்து உலகியல் அறிவு கற்பித்தல்; இதற்கு அடுத்து ஒருவனுடைய உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்.

ஆத்மீக ஞானம் அளிப்பவன் ஓர் ஆத்மாவைப் பல பிறவிகளிலும் பிறந்து உழலாமல் காப்பாற்றுகிறான். உலகியல் அறிவு புகட்டுகிறான் ஆத்மீக ஞானத்தை அடைவதற்காக மனிதர்களின் கண்களைத் திறந்துவிடுகிறான். மற்ற தானங்களெல்லாம், உயிரைக் காப்பாற்றுதல்கூட இந்த இரு தானங்களைவிட மிகத் தாழ்ந்த படிகளில்தான் உள்ளன. ஆதலால் ஆத்மீக அறிவு புகட்டுவதே அனைத்திலும் சிறந்த பணி; நாம் செய்யக்கூடிய மற்றவிதமான தொண்டுகளெல்லாம் தாழ்ந்தவை என்பதை நீங்கள் அறிந்துணர வேண்டுவது அவசியம்.

மனிதனுக்கு ஆத்மீக ஞானம் அளிக்கிறவன்தான் மனித குலத்துக்குப் பேருபகாரம் செய்தவனாவான். ஆத்மீக முறையே நமது வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் உண்மையான அஸ்திவாரம். ஆகவேதான் மனிதனுடைய ஆத்மீகத் தேவைகளில் உதவியவர்கள் மிகுந்த சக்தியும் செல்வாக்கும் பெற்று விளங்கினார்கள்.

ஆத்மிகத் துறையில் பலத்துடனும அசைக்க முடியாமலும் விளங்குகின்ற மனிதன், தான் விரும்பினால், மற்றெல்லாத் துறைகளிலும்கூட வலிமையுடன் விளங்கமுடியும். மனிதனுக்கு ஆத்மிக பலம் ஏற்படுகிறவரை அவனால் தனது வாழ்க்கையின் உலகியல் தேவைகளைக்கூட நன்கு பூர்த்திசெய்துகொள்ள முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x