Published : 28 Dec 2014 10:55 AM
Last Updated : 28 Dec 2014 10:55 AM
லோக்பால் தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர் இடம்பெறும் வகையிலான சட்டத்திருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
தற்போதைய மக்களவையில் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. அக்கட்சி தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே, மக்களவையில் உள்ள அக்கட்சியின் தலைவரை லோக்பால் தேர்வுக்குழுவில் இடம்பெறும் வகையில் இச்சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர் இடம்பெறும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது, இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, தற்போது 60 ஆக உள்ளது. இதை அதிகரிப்பது அல்லது குறைப்பது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. குடிமக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி தொடர்பாக ஜம்மு – காஷ்மீர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT