Published : 30 Dec 2014 10:22 AM
Last Updated : 30 Dec 2014 10:22 AM

ஏப்ரல் மாதத்துக்குள் சென்னையில் அனைத்து சாலைகளும் போடப்படும்: மேயர் சைதை துரைசாமி உறுதி

ஏப்ரல் மாதத்துக்குள் சென்னையில் அனைத்து சாலைகளும் போடப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உறுதியளித்தார்.

மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் சாலைப் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, “அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலைப் பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிக்கப்படும் என்று ஆணையரின் ஒப்புதலோடு தெரிவிக்கப்படுகிறது. அது தவிர மற்ற அனைத்து சாலை பணிகளும் ஏப்ரல் மாதத்துக்குள் செய்துமுடிக்கப்படும்” என்றார்.

சென்னையில் புதிதாக 3 சாலைகளை விரிவாக்கம் செய்ய மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை மற்றும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவது உத்தேசிக்கப்பட்டுள்ள வாகனப் போக்குவரத்து மேம்பாலத் திட்டத்துக்கு அவசியமாகிறது. அதேபோல திருவான்மியூர் பகுதியை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் முக்கிய சாலையான அவ்வை நகர் முதன்மைச் சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 சாலைகளுடன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 21 சாலைகளின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 14 சாலைகளுக்கு திட்ட ஆய்வு நடத்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மன்றக் கூட்டத்தில் மேயர் பேசும்போது, “பாலங்கள் கட்டுவதால் மட்டுமல்லாமல் சாலை விரிவாக்கத்தின் மூலமாகவும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x