Published : 31 Aug 2017 10:23 AM
Last Updated : 31 Aug 2017 10:23 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மகர ராசி வாசகர்களே!

மற்ற சாட்சிகளை விட மனசாட்சியை மதிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும் புதிய தொடர்புகளையும் கொடுத்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் எந்த வேலையிலும் தடுமாற்றம், இழுபறி நிலை உண்டாகும். வீண் விவாதங்கள், பகை வரக்கூடும். வெகுநாட்களாகியும் வராமல் இருந்த பணம், இனி வந்துசேரும். பழைய சொத்துப் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். முன்பிருந்ததைவிட மனைவியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பார்வைக் கோளாறு நீங்கும். உங்களுக்காகவும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அநாவசிய, ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். கோதுமை, கீரை மற்றும் நார்சத்து உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சிலிருந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். பணப் பற்றாக்குறை விலகும். சேமிக்கும் எண்ணம் வரும். வர வேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் என்பதை உணருவீர்கள். உங்களின் சுக வீடான 4-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் எப்போதும் புலம்பித் தவித்துக்கொண்டிருந்த தாயாரின் மனம் மாறும். அவருக்கிருந்த கை, மூட்டு வலியெல்லாம் நீங்கும். தாய்வழிச் சொந்தபந்தங்களால் ஆதாயமுண்டு. இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, நல்ல வீடு அமையும். சிலருக்கு வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். கிரகப் பிரவேசம் செய்து புது வீட்டில் குடி புகுவீர்கள்.

பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குரு பகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். இழுபறியாகிக்கொண்டிருந்த சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக முடியும்.

செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் முக்கியப் பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். சகோதரர்களின் மனம் மாறும். வீடு, வாகன வசதி பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணம் கூடி வரும். அங்குமிங்கும் புரட்டி ஏதாவது ஒரு வீடோ மனையோ வாங்கிவிட வேண்டுமென முயல்வீர்கள். ஆனால் உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வந்து செல்லும். சிறு சிறு விபத்துகள் வரும்.

குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஆனால், பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேசாதீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாகக் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்காகச் சாட்சிக் கையொப்பமிட வேண்டாம்.

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் பயணங்களால் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்த அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். துணிச்சலாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து சரக்குகளைக் கொள்முதல் செய்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டியது வரும். கடையை வேறிடத்துக்கு மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் முன்பிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் செய்த தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சக ஊழியர் அடிக்கடி விடுப்பில் செல்வதால் அந்த வேலையையும் நீங்கள் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும்.

இந்தக் குருமாற்றம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான நெளிவுசுளிவுகளை உணர்த்தும். அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:

மதுரை நகரில் அரசரடிப் பகுதியில் காளவாசல் எனும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகளின் அதிஷ்டானத்துக்குத் திருவோணம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள். வீண் பழி விலகி நிம்மதி உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x