Published : 31 Aug 2017 10:27 AM
Last Updated : 31 Aug 2017 10:27 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கடக ராசி வாசகர்களே!

சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ள நீங்கள், மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதைப் பளிச்செனப் பேசுவீர்கள். இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு, எந்த ஒரு வேலையையும் செய்யவிடாமல் முடக்கிவைத்த குரு பகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் செலவுகளைச் சுருக்கப் பாருங்கள். சேமிப்புகள் கரையும். உங்களைப் பற்றியோ உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி, மக்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். தாயின் உடல்நிலை பாதிக்கும். நெடுந்தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. நீர்,நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் யோசித்து முடிவெடுங்கள். மகளுக்குத் திருமணம் திடீரென ஏற்பாடாகும். மகனுக்கு இருந்த கூடாப் பழக்கவழக்கங்கள் நீங்கும். அயல்நாட்டில் வேலை கிடைக்கும். பிள்ளையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குரு பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணமெல்லாம் கைக்கு வந்து சேரும்.

தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக இருக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.

அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்பீர்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நேரம் தவறிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள். அலைந்து திரிந்து சில காரியங்களை முடிக்க வேண்டி வரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அண்டை அயலாரை அரவணைத்துச் செல்லுங்கள்.

செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். வருமானம் உயரும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று சேர்த்துவைத்த காணிக்கையைச் செலுத்துவீர்கள்.

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். வியாபாரத்தில் கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள்.

வியாபாரத்தில் கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போகவும். உத்தியோகத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு.

இந்தக் குரு மாற்றம் உங்களைப் பொறுமை, நிதானத்தால் புகழ்பெற வைப்பதுடன், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றிபெறவைக்கும்.

பரிகாரம்:

வேலூரிலிருந்து 25கிலோமீட்டர் தொலைவிலும் பள்ளி கொண்டாவிலிருந்து 4கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பசுமாத்துர் எனும் கிராமத்தில் எல்லையை ஒட்டியுள்ள ஸ்ரீநமச்சிவாயன் கோயில் கருவறையில் உள்ள சித்தரான ஸ்ரீஓம் நமச்சிவாய சுவாமிகளை வணங்குங்கள். துவரம் பருப்பைத் தானமாகக் கொடுங்கள். கவலைகள் விலகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x