Published : 31 Aug 2017 10:27 AM
Last Updated : 31 Aug 2017 10:27 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மிதுன ராசி வாசகர்களே!

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். இதுவரை உங்கள் சுகவீடான 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்தச் சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் தடுத்ததுடன், பலவிதங்களிலும் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் 02.09.2017 முதல் 02.10.2018 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுக்கப் போகிறார்.

திறமை இருந்தும் சரியான சந்தர்ப்ப, சூழ்நிலை அமையாதலால் முடங்கிக் கிடந்த உங்களுக்கு எதிலும் வெற்றி கிட்டும். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு அழகும் அறிவும் உள்ள குழந்தை பிறக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தாயாருக்கு இருந்து வந்த மூட்டுவலி, முழங்கால் வலியெல்லாம் விலகும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாளாகப் புதுப்பிக்கப்படாமலிருந்த குலதெய்வக் கோயிலைச் சொந்தச் செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதையோ இழந்ததைப் போல் இருந்த உங்கள் முகம் மலரும். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். சொந்தபந்த வீட்டு விசேஷங்களில் உங்களுக்கு இனி முதல் மரியாதை கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த பிரச்சினை தீரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் எல்லாம் மறையும். வராமலிருந்த சொத்து கைக்கு வரும். அவர்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குரு 11-வது வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்துவந்த பனிப்போர் நீங்கும். பாசமழை பொழிவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, தங்க ஆபரணம் வாங்கித்தருவீர்கள்.

கடன் பிரச்சினைகள் தீரும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்குப் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டுக்கு வேண்டிய தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றை வாங்குவீர்கள்.

குருபகவான் 02.09.2017 முதல் 05.10.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் செல்வதால் முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்களுடன் மனத்தாங்கல் வரும்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உடல் அசதி, சோர்வு வந்து செல்லும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினை வெடிக்கும். குடும்பத்துக்காக இன்னும் கொஞ்சம் கடினமாக உழைப்பது குறித்த சிந்தனை எழும்.

குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள், ஈகோ பிரச்சினைகள் வந்து போகும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். சின்ன சின்ன கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சிலர் வாஸ்துப்படி வீட்டைச் சரி செய்வீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களால் ஆதாயமடைவீர்கள். கோயில் பஜனைகளில் கலந்துகொள்வீர்கள்.

வியாபாரத்தில் பழைய கடனைப் பைசல் செய்யும் அளவிற்கு லாபம் அதிகரிக்கும். அதிக முதலீடுகள் செய்து கடையை நவீனமாக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்யுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் தீரும். நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் ஒன்று சேர்வீர்கள். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும்.

ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி சோகத்திலிருந்து உங்களை விடுவிப்பதுடன், முதல் தரமான யோகங்களையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

அருப்புக்கோட்டையிலிருந்து 31கிலோ மீட்டர் தூரத்திலுள்ள நாகலாபுரம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் நிஷ்டையில் அமர்ந்திருக்கும் ரெட்டியபட்டி சுவாமிகளை அமாவாசை நாளில் தரிசியுங்கள். ரோஸ் நிறத் துணிகளைத் தானமாகக் கொடுங்கள். நினைப்பது நிறைவேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x