Published : 31 Aug 2017 10:25 AM
Last Updated : 31 Aug 2017 10:25 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: விருச்சிக ராசி வாசகர்களே!

எந்த வேலையையும் உடனே முடிக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து ஓரளவு பணப் புழக்கத்தையும் வசதி வாய்ப்பையும் பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குரு பகவான் 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களின் விரய வீடான 12-ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளைச் சுருக்கப் பாருங்கள். உறவினர்கள், நண்பர்களுக்கு மத்தியில் வெறும் பெருமைக்காகக் கைக்காசைக் கரைக்காதீர்கள்.

குரு 12-ம் வீட்டில் மறைவதால் எதிர்பாராத வகையில் முன்னேற்றமும் ஆனால், எதிர்பார்த்த வகையில் ஏமாற்றமும் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப் போகவும். அந்தரங்க விஷயங்களில், உள்விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்க்கப் பாருங்கள். யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம்.

எல்லாவற்றிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. குரு பகவான் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாய்வழிச் சொத்து கைக்கு வந்து சேரும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். புறநகர்ப் பகுதியில் வாங்கியிருந்த மனையை விற்று வேறு நல்ல இடத்தில் வீடு வாங்குவீர்கள். பழைய சொந்தங்களெல்லாம் தேடி வரும். உங்களிடம் இருந்து வந்த கூடாப் பழக்கங்கள் குறையும். பிள்ளைகளை உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பிவைப்பதுடன், நீங்களும் ஒருமுறை சென்று வருவீர்கள்.

குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். சில சமயங்களில் எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை உதாசீனப்படுத்தியவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அசுர வளர்ச்சியடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகம் ஏற்படும். உங்களைக் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருந்த உறவினர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியது வரும். வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரால் உதவியுண்டு.

ஆனால், புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நீங்கள் நல்லதே சொன்னாலும் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களிடம் சண்டையிடுவார்கள். நேரம் தவறிச் சாப்பிடாதீர்கள். வயிற்றுப் பாதிப்பு வரக்கூடும். தள்ளிப்போன அரசு காரியங்கள் உடனே முடியும். வருங்காலத்தைப் பற்றிய கவலைகள், மற்றவர்கள் செய்த துரோகத்தை நினைத்து வருந்துவீர்கள். அண்டை வீட்டாரின் ஆதரவு உண்டு.

செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குரு பகவான் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பூர்விகச் சொத்துகள் முறையானபடி உங்கள் கைக்குவரும் காலம் இது.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தாய்மாமன் வகையில் லாபம் உண்டு.

குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் நீங்கும். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் குருபகவான் சென்று மறைவதால் ஒரே வேளையில் அதிக உணவு எடுத்துக் கொள்ள வேண்டாம். முக்கியக் காரியங்களுக்காக இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. யாருக்கும் உத்தரவாதக் கையெழுத்து இடவேண்டாம்.

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். பெரிய பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சகோதரியின் திருமணத்தை நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் பலவகையில் கடன் வாங்கிப் புதிய முதலீடு செய்வீர்கள். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர உத்திகளைக் கையாளுவீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். ஆனால், வேலையாட்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருங்கள். இடமாற்றம் உண்டு.

இந்தக் குரு மாற்றம் திடீர் செலவுகளையும் பயணங்களையும் தந்தாலும் பொது அறிவையும் புது அனுபவங்களையும் தந்து உயர்த்தும். தனிப்பட்ட வாழ்வில் அமைதி ஏற்படும்.

பரிகாரம்:

பாண்டிச்சேரி முதலியார்பேட்டை காராமணிக் குப்பத்தில் கீரப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீசக்திவேல் பரமானந்த சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கு அஸ்வினி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். மன நிம்மதி கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x