Published : 20 Jul 2017 09:35 AM
Last Updated : 20 Jul 2017 09:35 AM

கும்பம்: ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)

கொடுக்கும் குணம் கொண்ட நீங்கள் விளம்பரத்தை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள்! ராகுவும் கேதுவும் 27.07.2017 முதல் 13.02.2019 வரை உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களைத் திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள்.

சந்தேகத்தால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வீர்கள். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே! இனி ஆரோக்கியம் கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கடன் பிரச்சினைகளில் ஒருபகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றிப் புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்களின் வருகையால் சுபச்செலவுகளும் அதிகரிக்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 04.04.2018 வரை ராகு பகவான் செல்வதால் குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் மத்தியில் நிலவிய கோப, தாபங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

சனியின் பூசம் நட்சத்திரத்தில் 05.04.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் செல்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பியின் நட்பு கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சிகள் நடக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 11.12.2018 முதல் 13.02.2019 முடிய ராகு பகவான் செல்வதால் பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு.

வியாபாரத்தில் புது உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தொந்தரவு கொடுத்துவந்த மேலதிகாரி, இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத்தடைகள், தலைச் சுற்றல், நெஞ்சுவலி தந்த கேது இப்போது பன்னிரெண்டில் சென்று அமர்கிறார். இனி உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முன்கோபம் விலகும். எதிலும் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகளின் கூடாப் பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்து போகும். வேற்று மதத்தவர், மொழியினர், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்

செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.07.2017 முதல் 29.11.2017 வரை கேது பகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் அலைச்சலும் செலவும் இருக்கும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். அதிகாரிகளை அனுசரித்துப்போவது நல்லது.

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளை விசேஷங்களில் சந்தித்து மகிழ்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை எப்படி பைசல் செய்யலாமென யோசிப்பீர்கள். வாகனத்தைச் சரி செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 07.08.2018 முதல் 13.02.2019 வரை கேது செல்வதால் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவருடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து போகும். மனைவி வழி உறவினருடன் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

இந்த ராகு-கேது மாற்றம் ஓய்ந்து போயிருந்த உங்களை உயர வைப்பதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாட்களில் ஸ்ரீகுரு ராகவேந்திரரைக் கற்கண்டு தந்து வணங்குங்கள். செம்பருத்திச் செடி நட்டுப் பராமரியுங்கள். நீண்ட நாள் கனவு நனவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x