Published : 13 Apr 2017 08:14 AM
Last Updated : 13 Apr 2017 08:14 AM

ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: துலாம், விருச்சிகம், தனுசு

துலாம் ராசி வாசகர்களே

ஓடோடி வந்து யாருக்கும் உதவும் குணத்தை வாழ்வின் ஒரு அங்கமாகக் கடைப்பிடிப்பவர்களே! உங்கள் ராசியிலேயே, இந்த ஆண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.

18.12.2017 வரை பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அடுக்கடுக்கான வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டிவரும். வெளிமாநிலங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். பணம், நகையைக் கவனமாகக் கையாளுங்கள். 19.12.2017 முதல் சனி 3-ல் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பண வரத்து அதிகரிக்கும். திட்டமிட்டுச் சில காரியங்களை முடிப்பீர்கள். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

1.9.2017 வரை குரு 12-ல் தொடர்வதால் திடீர்ப் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நினைத்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்து செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் 02.9.2017 முதல் 13.02.2018 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.

சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். உணவில் காய்கறிகள், பச்சைக் கீரை வகைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு பகவான் வக்கிரகதியிலும், அதிசாரத்திலும் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தமக்கைக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள்.

26.7.2017 வரை கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிவரும். அடுத்தவர்களை விமர்சித்துப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. யாருக்கும் உத்தரவாதக் கையெழுத்திடாதீர்கள். ஆனால் ராகு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் வர வேண்டிய பணம், கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். 27.7.2017 முதல் கேது 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாரின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுங்கள். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வரும். ஆனால் 10-ம் வீட்டில் ராகு அமர்வதால் மன தைரியம் பிறக்கும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். ஆனால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரியின் அறிமுகமும் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆனால் ஜுலை 27-ம் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக்கும்.

ராகுபகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்ம னைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குல தெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் ஆரோக்கியமும் அழகும் கூடும். ஆனால் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வாகனம் அடிக்கடி பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவும் அதிகரிக்கும். கணவன்மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இருவருக்குள் பிரச்னையை உருவாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உங்கள் குடும்பத்தினரையோ, உறவினரையோ யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் உடனே நம்பிவிடாதீர்கள்.

பெண்களுக்கு: ஜுலை 26ம் தேதி வரை ராகு சாதகமாக இருப்பதால் திடீர் யோகம், திருப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்னி யோன்னியம் அதிகரிக்கும். தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். நாத்தனார், மச்சினர் மதிப்பார்.

குருவின் போக்கு சரியில்லாததால் ஈகோ பிரச்சினையால் கணவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டிவரும். வங்கிச் சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கிறதா எனப் பார்த்துக் காசோலை தருவது நல்லது.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய இப்பாடலை சிவபெருமானின் படத்திற்கு முன்பு அமர்ந்து தினந்தோறும் ஐந்து முறை படித்து தியானம் செய்யுங்கள். குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்.

ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்

வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்

தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்

ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே



விருச்சிக ராசி வாசகர்களே

இஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கையையே பெரிதென நினைக்கும் மனசுடையவர்களே! உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்களிடம் குறைத்துப் பேச வேண்டாம். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

1.9.2017 வரை உங்கள் ராசிக்கு குரு, லாப வீட்டில் தொடர்வதால் உங்களின் புகழ், கவுரவம் உயரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த சண்டை, சச்சரவுகள் விலகி அன்னியோன்னியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ஆனால் 02.9.2017 முதல் 13.02.2018 வரை குரு, 12-ல் வந்தமர்வதால் முன்னேற்றம் தடைப்படாது.

ஆனால் அலைச்சல் இருக்கும். அத்துமீறிய செலவுகளால் அக்கம்பக்கம் கடன் வாங்க வேண்டி வரும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் அனைத்திலும் நீங்கள் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு, வக்கிர கதியிலும், அதிசாரத்திலும் ராசிக்குள்ளேயே வந்தமர்வதால் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி அன்றாடம் அவசியமாகிறது. முடிந்தவரை வெளி உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள்.

18.12.2017 வரை ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் மற்றும் உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். வாகனத்தை இயக்கும் முன் பிரேக்கை சரிபாருங்கள். பண வரவு இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 19.12.2017 முதல் சனி 2-ல் அமர்வதால் ஆரோக்கியம் சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும், இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அரசு சம்மந்தப்பட்ட காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

26.7.2017 வரை ராகு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் தொடர்வதால் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடித்துக்காட்டுவிர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சிலருக்குப் பழைய வீட்டை இடித்துப் புதுப்பிப்பது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். கேது 4-ம் வீட்டில் தொடர்வதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அரசாங்க அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டு உரிமையாளர்களால் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். 27.7.2017 முதல் ராகு 9-லும், கேது 3-லும் அமர்வதால் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையாருடன் மனக்கசப்பு வந்து செல்லும். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, வீண் டென்ஷன் வந்து செல்லும். புதிய பதவிகள் தேடி வரும். சிறுகச் சிறுக சேமித்துவைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று பார்த்து அதைச் சரி செய்வீர்கள். பற்று வரவு உயரும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள்.

பெண்களுக்கு: ஆகஸ்ட் வரை குரு சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவதற்குக் கடன் கிடைக்கும். கணவர் உங்களை மதிப்பார். பிள்ளை பாக்கியம் உண்டாகும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மாமியார், மாமனாரின் ஆதரவு கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்கச் சனியின் போக்கு சரியில்லாததால் உறக்கமின்மை, சைனஸ் தொந்தரவு, நெஞ்சு வலி வந்து நீங்கும். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள்.

ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய இப்பாடலை ஸ்ரீ முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு அமர்ந்து தினந்தோறும் மூன்று முறை படித்து தியானம் செய்யுங்கள். பிணிகள் அகலும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!



தனுசு ராசி வாசகர்களே

ஈரமான மனசுடன் எப்பொழுதும் வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களே! உங்கள் ராசிக்குப் பதினோராவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வி.ஐ.பி.க்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். வருங்காலத்திற்காகச் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.

18.12.2017 வரை விரையச் சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்புவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 19.12.2017 முதல் ஜென்மச் சனியாக அமர்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக நீர் பருகுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இளைய சகோதரரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். வீண் வறட்டு கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

அவ்வப்போது தன்னம்பிக்கை குறையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன், மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். காலில் அடிபடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

1.9.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் தொடர்வதால் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. ஆனால் 2.9.2017 முதல் 13.02.2018 வரை குரு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும்.

பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். 14.02.2018 முதல் 13.04.2018 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமையும், அலைச்சலும் இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்ட வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.

பெண்களுக்கு: செப்டம்பர் மாதம் முதல் குரு சாதகமாவதால் தடைகள் யாவும் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். மாமியார் மனம் விட்டுப் பேசுவார். நாத்தனாரின் தொந்தரவுகள் குறையும். சகோதர வகையில் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். சனியின் போக்கு சரியில்லாததால் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, வீண் கவலைகள் வந்து செல்லும்.

கீழ்வரும் கம்பராமாயணப்பாடலை ஸ்ரீஆஞ்சநேயர் படத்திற்கு முன்பு அமர்ந்து தினந்தோறும் ஒன்பது முறை படித்து தியானம் செய்யுங்கள்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக

ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற

அணங்கைகண்டு ; அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான்

அவன் நம்மை அளித்து காப்பான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x