Published : 15 Mar 2017 03:04 PM
Last Updated : 15 Mar 2017 03:04 PM

பங்குனி மாத நட்சத்திர பலன்கள் - மூலம், பூராடம், உத்திராடம்

மூலம்

எளிதில் மற்றவரை கவரும் வகையில் திறமையாக செயல்படும் மூலம் நக்ஷத்திர அன்பர்களே, காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனாலும் புதிய வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் தொடர்ந்து இருப்பதால் உங்கள் வேலைகள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும். தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். ஆனாலும் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் நிலவிய பிரச்னைகள் விலகும். வருமானம் உயரும். வங்கிக் கடன்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி விரைவாக விற்பனை செய்வீர்கள். ஆனால் உங்கள் எண்ணங்கள், திட்டங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட இலக்குகளை எட்டும். உங்களின் நெடுநாளைய லட்சியம் நிறைவேறும். தொண்டர்களை அரவணைத்து நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினர் சிறிது ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவே புகழ் கிடைக்கும். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அதேசமயம் உங்கள் கடமையை சரிவர ஆற்றுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள். மாணவமணிகள் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். வெளி விளையாட்டுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும். தாமரை மலரை குருவுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்கள்.

+ சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்

- காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம்



பூராடம்

வாழ்க்கையில் முன்னேற்றமடையை திட்டமிட்டு செயல்படும் பூராடம் நக்ஷத்திர அன்பர்களே, எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப் பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கும். மற்றபடி தயக்கமின்றி உங்கள் எண்ணங்களை மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறுவீர்கள். அலுவலகத்தில் சகஜமான நிலை இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் சீராகவே நடக்கும். ஆனாலும் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். கொடுக்கல், வாங்கல் ஓரளவு நன்றாகவே தொடரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வியாபார வட்டாரத்தில் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். அதேநேரம் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்கள் திருப்தியடைவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி முடியும். ஆனாலும் தொண்டர்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி சமுதாயத்தில் பொறுப்புமிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் பெயரும் புகழும் வளரும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.

கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைப் பெறும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஆனாலும் அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மற்றபடி உங்களைக் குறைசொல்லும் சக கலைஞர்கள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமையில் பங்கம் ஏற்படாத வண்ணம் கவனமாக நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். பேசும்போது அவசரப்படாமல் நிதானமாகப் பேசவும். உற்றார், உறவினர்களை கௌரவமாக நடத்தவும். மற்றபடி பண வரவுக்கு எந்தப் பிரச்னையும் வராது.

மாணவமணிகள் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் பாடுபட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனினும் பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உற்சாகத்துடன் விளையாட்டில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். பிச்சிப்பூ வாங்கி அருகிலிருக்கும் முருகனுக்கு மாலையாக சாத்தி வழிபடவும். மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

+ சமுதாயத்தில் பொறுப்புமிக்க பதவிகள் உங்களைத் தேடி வரும்

- வீண் பிரச்சனைகள் தலைதூக்கும்



உத்திராடம்

அதிக உழைப்பு இல்லாமல் திறமையை கொண்டே முன்னேறும் உத்திராடம் நக்ஷத்திர அன்பர்களே, எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.

உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். அலுவலகப் பயணங்களால் நன்மை உண்டாகும். தடைபட்டிருந்த ஊதிய உயர்வு கிடைக்கும். ஆனால் உடலில் சிறிது சோர்வு ஏற்படும் என்பதால் சுறுசுறுப்பு குறையும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நஷ்டம் குறைந்து வருமானம் வரத் தொடங்கும். புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தொடர்ந்து வந்த போட்டிகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். கொடுக்கல், வாங்கலில் நலம் தரும் திருப்பங்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும், செயலாற்றும் திறமையும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். கட்சித் தலைமையுடன் இணக்கமாக இருப்பீர்கள். வழக்குகளில் முடிவைக் காண்பீர்கள். சமூகத்தில் புதிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சிறிய தடைகளுக்குப் பிறகு சிறப்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். உங்களின் கடமையை சரியாக நிறைவேற்றுவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பெண்மணிகளுக்கு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவருடன் ஒற்றுமையாக நடந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மாணவமணிகள் நன்றாகப் படித்து தேர்வுக்கு தயாராவீர்கள். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். மற்றபடி உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள். அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் எழுந்தருயிருக்கும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடவும். அவருடைய அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றியே கிடைக்கும்.

+ எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்

- மறைமுக நோய் ஏற்படலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x