Last Updated : 13 Nov, 2014 12:15 PM

 

Published : 13 Nov 2014 12:15 PM
Last Updated : 13 Nov 2014 12:15 PM

எதிரிக்கு எதிரியாகும் நண்பன்

காலபைரவர் அஷ்டமி நவ.15

கடவுள் என்றால் அனைவரையும் காப்பவர். ஆனால், அந்தத் தெய்வங்கள் கோயில் கொண்டுள்ள தலங்களில் அக்கோயில்களில் கொள்ளை போகாமல் காப்பவர் கால பைரவர். பக்தர்களின் எதிரிக்கு எதிரியாகும் இவர், பக்தர்களைத் துன்பத்திலிருந்து காக்கும் நண்பர். இவர் தோன்றிய வரலாறு சுவாரஸ்யமானது.

பிரம்மாவுக்குச் சதுர்முகன் என்று காரணப் பெயர் ஒன்று உண்டு. ஆதியில் பிரம்மா ஐந்து தலையுடனேயே காணப்பட்டாராம். அழகிய ஐந்து திருமுகங்களைக் கொண்டுள்ளதால் தானே அழகன் என்ற கர்வம் ஏற்பட்டது பிரம்மனுக்கு. இந்த மதி மயக்கத்தில் இருந்த அவர், என்ன செய்கிறோம் என்றே அறியாமல் தேவை இல்லாமல் சிவனை நிந்திக்கத் தொடங்கினார். இந்த நிந்தனை அளவு மீறிப் போக, சிவனும் பிரம்மனுக்குப் புத்தி புகட்ட முடிவு செய்தார்.

இதற்கு அவரது ஐந்தாவது தலையைத் துண்டிப்பது சரியான தண்டனையாக இருக்கும் என்று முடிவு செய்தார் சிவன். இந்த வேலையைச் செய்ய பைரவரைத் தோற்றுவித்தார். இந்தப் பைரவர் சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் மேல் நோக்கிய தலைமுடியுடனும் காட்சியளித்தார். இந்தத் தலைமுடியில் செருகினாற்போல் சந்திர பிரபை காணப்பட்டது. தலைமுடியோ சுடும் ஜுவாலை. அதில் இருந்தது குளிர் நிலவு. கற்பனைக்கு எட்டாத முரண் அல்லவா இது!

நான்கு திருக்கரங்கள் கொண்ட அவரது கைகளில் உடுக்கை, சூலம், பாசக்கயிறு ஆகியன இருக்க, நான்காம் கரத்தில் இவர் கொய்த பிரம்மாவின் ஐந்தாம் தலை. பிரம்மச்சாரி என்பதற்கு வடு என்ற பெயரும் இருப்பதால், இவர் வடுக பைரவர் என்றும் அழைக்கப்பட்டார். பூத, பிசாசக் கூட்டங்களுக்கும் இவரே தலைவராக இருப்பதால் பூத, பிசாச பயங்களில் இருந்து விடுபட இவரை வணங்கலாம்.

பிரம்ம கபாலத்தைக் கொய்ததன் மூலம் ஆணவத்தை அடக்கத் தோன்றியவர் பைரவர் என்று சொல்லலாம். இந்த நிகழ்வு நடந்த இடம் தமிழகத்தில் உள்ள திருக்கண்டியூர் என்பார்கள். ஈசன் காட்டிய முதல் வீரம் இது என்பதால் அட்டவீரட்டான தலங்களில் இது முதன்மையானது. பைரவர் பெண்களின் காவலன் என்பதால், அஷ்டமி திதியில் இவரை வழிபடும் பெண்கள் பாதுகாப்பாய் இருக்கலாம் என்பது ஐதீகம். பெண் குழந்தைகளைப் பெற்றவர்களும், இக்காலகட்டத்தில் தங்கள் குழந்தையின் பாதுகாப்பிற்காகக் கால பைரவரை வணங்கலாம்.

சிவன் கோயில்களில் ஒற்றை நாயை வாகனமாகக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் இவருக்கு முந்திரி மாலை அணிவித்து, சிவப்புத் துணியில் கட்டிய மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம். பைரவருக்குப் பல திருநாமங்கள். அவை: கால பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோத பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர். இவர்களின் தேவியராக பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் விளங்குகின்றனர். காசியில் பைரவ ஆராதனை மிக பிரபலம்.

வழிபாடு

ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். இவர் அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுவார். பைரவர் என்ற பெயர் கொண்ட இவர், தனது மடியில் பைரவி என்ற திருநாமம் பெற்ற தனது மனைவியை இருத்திக்கொண்டு காட்சி அளிப்பார். இரு கரங்களுடன் காட்சி அளிக்கும் இவர் ஒரு கரத்தில் தங்கக் கலசத்தில் அமிர்தமும், மறு கரத்தில் சூலமும் வைத்திருப்பார். வைரக் கிரீடமும், பட்டு வஸ்திரமும் அணிந்திருப்பார். தம்பதி சமேதராகக் காட்சி அளிக்கும் இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வணங்கினால் பொன், பொருள் உட்பட சகல சம்பத்தும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x