Published : 27 Mar 2014 01:04 PM
Last Updated : 27 Mar 2014 01:04 PM

வார ராசி பலன் | 27-03-14 முதல் 02-04-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

உங்கள் ராசிக்கு 11இல் புதன் உலவுவதாலும் சனி 7இல் வக்கிரமாக இருப்பதாலும் வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். மாணவர்களது திறமை வெளிப்படும். முக்கியமானதொரு காரியம் 27ஆம் தேதி நிறைவேறும். குரு 3இலும் சூரியன் 12இலும் உலவுவதால் மக்கள் நலனில் அக்கறைதேவைப்படும். அரசாங்க அபராதம் கட்ட வேண்டிவரும். வயிறு, கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

ஜன்ம ராசியில் கேதுவும், 7இல் ராகுவும் இருப்பதால் பிறரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. 28ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்தினால் நஷ்டப்படாமல் தப்பலாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. 31 முதல் சுக்கிரன் 11ஆமிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றிவாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28, ஏப்.1.

திசை: வடக்கு. நிறங்கள்: வெண்மை, பொன் நிறம், சிவப்பு | எண்: 5.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடவும். துர்கைக்கும், விநாயகருக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2இல் குருவும், 6இல் ராகுவும், 9இல் சுக்கிரனும் 10இல் புதனும் 11இல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். சகோதரிகளால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். தந்தையாலும், வாழ்க்கைத் துணைவராலும், உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். 28 முதல் புதன் 11ஆமிடம் மாறுவதால் பணவரவு அதிகமாகும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். 31ஆம் தேதி முதல் சுக்கிரன் 10ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தொழில் சம்பந்தமான சில பிரச்னைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். 1, 2 தேதிகளில் செலவுகள் சற்று அதிகமாகும். சிக்கனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28, 30.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், நீலம், பச்சை, வெண்மை | எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.



மிதுனம்

சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் திறமை பளிச்சிடும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். போட்டிகளில் வெற்றி கிட்டும். பிதுரார்ஜிதச் சொத்துக்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு கூடும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பண வரவுகூடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடமுண்டு. 28ஆம் தேதி முதல் புதன் 10ஆமிடம் மாறுவதால் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். 31ஆம் தேதி முதல் சுக்கிரன் 9ஆமிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 28, 30.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன். l எண்கள்: 1, 6, 7.

பரிகாரம்: துர்கையையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும். சுப்பிரமணிய ஜபம் செய்வது நல்லது.



கடகம்

3இல் வக்கிர செவ்வாயும், 4இல் வக்கிர சனியும், 8இல் புதனும், 10இல் கேதுவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். 4இல் ராகு இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும்.

28 முதல் புதன் 9ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் தெய்வப் பணிகளும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். 31 முதல் சுக்கிரன் 8ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்குப் பிரச்னைகள் விலகும். புதிய வாய்ப்புக்கள் தேடிவரும். மாதர்கள் நலம் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27 (பகல்), 30. ஏப்.1.

திசைகள்: வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன், சிவப்பு. l எண்கள்: 5, 7.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். குங்குமார்ச்சனை செய்வது நல்லது.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 3இல் ராகுவும், 11இல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.

2இல் வக்கிர செவ்வாயும், 3இல் வக்கிர சனியும், 6இல் சுக்கிரனும், 7இல் புதனும், 8இல் உங்கள் ராசிநாதன் சூரியனும், 9இல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் சோதனைகள் சூழும். தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். 28 முதல் புதன் 8ஆம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, புகை நிறம். l எண்கள்: 3, 4.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். மகாலட்சுமி அஷ்டகம் சொல்லவும்.



கன்னி

5இல் சுக்கிரனும் 6இல் புதனும் உலவுவதால் அளவோடு நலம் உண்டாகும். மனத்தில் உற்சாகம் பெருகும் கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்களும் தேடிவரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும்.

27ஆம் தேதி ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். 28ஆம் தேதி முதல் புதன் 7ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணைவராலும், கூட்டாளிகளாலும் பிரச்சினைகள் ஏற்படும். 31ஆம் தேதி முதல் சுக்கிரன் 6ஆமிடம் மாறுவதும் குறையே. ஆடவர்கள் பெண்டிரால் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிவரும்; எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 27, 28, 30.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை l எண்கள்: 5, 6.

பரிகாரம்: செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது அவசியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x