Published : 25 Apr 2019 11:09 AM
Last Updated : 25 Apr 2019 11:09 AM
தத்வமஸி, அயமாத்மா பிரம்மஹ், அஹம் பிரம்மாஸ்மி, பிரஜ்ஞானம் பிரம்மஹ், சத்தியம்- ஞானம்- அனந்தம்- பிரம்மம் போன்ற சிறு சொற்றொடர்கள் மகாவாக்கியம் என்கிற சிறப்புப் பெயர் பெறுகின்றன.
முழு வேதாந்தத்தின் சாராம்சத்தைச் சின்னஞ்சிறு வாக்கியத்தில் அடைத்துத் தருவதால் இவை மகாவாக்கியம் எனப்படுகின்றன.
உலகம்- உயிர்- கடவுள் ஆகிய மூன்றும் வேறுவேறல்ல, மூன்றும் ஒன்றே எனும் ஐக்கியப் பேருண்மையைச் சுருக்கமாகச் சின்னஞ்சிறு வாக்கியத்தில் தருவதால் இவை மகாவாக்கியம் எனப்படுகின்றன. மூன்று வெவ்வேறு விஷயங்களாகத் தெரிவது ஒரு பிரிவில்லாத மெய்ப்பொருள் ஆகும். அதை அகண்டார்த்த போதகம் என்பர். இவை ஐக்கியப் பொருளை வெளிப்படுத்தும் ஞானச் சொற்கள். மூன்றும் வேறுவேறாகத் தெரிந்தாலும் அவை ஒன்றே.
மகாவாக்கியங்களில் மிகவும் சிறப்புடையது தத்வமஸி. வேதாந்தத்தில் நூற்றுக்கணக்கான மகாவாக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் நான்கு வேதங்களின் சிறப்பு வாக்கியமாக ஒரு நான்கை மட்டும் பொறுக்கி எடுத்து அவை மட்டுமே மகாவாக்கியங்கள் என்கின்றனர் சிலர்.
மகாவாக்கியங்களில் உயர்ந்தது, தாழ்ந்தது, சிறப்புடையது, சிறப்பற்றது என்கிற வேற்றுமையே இல்லை. இவற்றில் தத்துவமஸி மிக உயர்ந்தது என்று தனிமைப்படுத்தவும் தேவையில்லை. அகண்டார்த்த போதக வார்த்தை எதுவானாலும் அது மகாவாக்கியமே.
மகாவாக்கியம் புரிந்து கொள்வதற்கானது
மகாவாக்கியம் ஒருவகை மந்திரம்; இது சக்திவாய்ந்த மந்திரம் என்றெல்லாம் பேசுவது அபத்தம். இதன் ஆழ்ந்த உட்பொருள் ஒருவருக்கு முக்தியை உடனே வழங்க வல்லது. ஆகையால் மகாவாக்கியத்தினைக் கற்றுப் புரிந்துகொள்ள ஆசைப்பட வேண்டும்.
மகாவாக்கியத்தைக் குரு மூலமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதை ச்’ரவணம் என்பர். இதன்மூலம் வேதாந்தம் முழுவதின் மாசறு காட்சி உண்டாகும். வேதாந்தப் பார்வை பெறுவோம். இதன்மூலம் அகண்ட பேருண்மை வெளிப்படும். ச்’ரவணத்தை வேதாந்த தாத்பர்ய நிச்சயம் என்பர்.
வாக்கியவிருத்தி
வாக்கியவிருத்தி என்றால் சொற்றொடரின் பொருள். வழக்கமாகச் சூத்திரங்களுக்கு விருத்தி எழுதுவார்கள். பிரம்ம சூத்திரம் என்னும் நூலுக்குப் பல விருத்திகள் உள்ளன. கூட ஆதி சங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு வழங்கிய பாஷ்யத்தை ஒட்டி சதாசிவ பிரம்மேந்திரர் ஒரு விருத்தி எழுதியிருக்கிறார்.
விருத்திகள் சூத்திரத்தை விரித்து விளக்குவன. சில விருத்திகள் சூத்திரங்களைப் போலவே மிகச் சுருக்கமாக இருந்துவிடுவதுண்டு. வாக்கியவிருத்தியும்கூடச் சூத்திரம் போலவே ரத்தினச் சுருக்கமாக இருப்பதால் விருத்திக்கும் விருத்தி விளக்கம் தேவைப்படுகிறது. அதனால் இந்த நூல் எழுந்துள்ளது.
தத்வமஸி
மகாவாக்கிய விளக்கம்
பேராசிரியர் க. மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ. 150
தொடர்புக்கு : 90956 05546
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT