Last Updated : 18 Apr, 2019 12:07 PM

 

Published : 18 Apr 2019 12:07 PM
Last Updated : 18 Apr 2019 12:07 PM

பிரபஞ்ச ரட்சகன் ராமன்

ஸ்ரீராம நவமி வைபவத்தை ஒட்டி, மயிலாப்பூர் அப்பர் சுவாமி திருக்கோயிலில் பிரபஞ்ச இரட்சகா ராமா என்னும் நாட்டிய நாடகம் கடந்த ஞாயிறன்று நடந்தது.

எளிமையின் திருவுரு

அவதார புருஷராக இருந்தாலும் ராமன் எல்லா உயிர்களுக்கும் பொதுவான எளிமையின் திருவுரு என்பதை விளக்கும் காப்பியம் ராமாயணம். பல்வேறு பண்பாடு சார்ந்த ராமாயணங்கள் வழக்கில் உள்ளன.

எல்லோருக்கும் இரங்கும் எளிமையான அவரின் அருளைப் போலவே, அவரின் நாமமும் எளிமையின் ஸ்வரூபமே. இல்லாவிட்டால் அவரின் பெயரைக்கூட சரியாக உச்சரிக்க முடியாமல், `மரா.. மரா..’ என்று தொடர்ந்து உச்சரித்த வால்மீகிக்கு ராமாயணம் எனும் பெரும் காப்பியத்தை எழுதும் பாக்கியம் கிடைத்திருக்குமா? இப்படிப்பட்ட ராமாயணத்தை, கோயம்புத்தூர் `ஷங்கரம்’ நாட்டியப் பள்ளி மாணவிகள் எளிமையாகவும் மிகவும் திறமையாகவும் காட்சிபூர்வமாக தரிசனப்படுத்தினர்.

எட்டு காட்சிகளில் ராமாயணம்

அத்யாத்தம ராமாயணம், கிருபானந்த வாரியரின் ராம காவியம், கம்ப ராமாயணம் ஆகியவற்றிலிருந்து அரிதான சில சம்பவங்கள், விளக்கங்களை காட்சிப்படுத்தியதுதான் இந்த நாட்டிய நாடகத்தை, பொதுவாக நடத்தப்படும் நாட்டிய நிகழ்ச்சிகளிலிருந்து வித்தியாசப்படுத்தியது. பாபநாசம் சிவனின் ஸ்ரீராம சரிதம் பாடல்கள் நம்முடைய சுட்டுவிரலைப் பிடித்து அழைத்துக் கொண்டு நாட்டியத்தோடு ஒன்றவைத்தன.

நட்டுவாங்கம், நாட்டியமாக்கம் சஷ்மிதா அரோரா, அஜிஸின் வாய்ப்பாட்டும், சிவகாமி சதீஷின் வயலின் இசையும், கே. ராமமூர்த்தியின் மிதமான மிருதங்க ஒலியும் காட்சிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன.

ராமனும் விதிவிலக்கல்ல

அறியாத வயதில் ராமனும் அவனுடைய இளவல்களும் கூனியின் முதுகில் பந்தை

அடிக்க, கூனிக்கு அவர்களின் மேல் வெறுப்பு ஏற்படுகிறது. எளியோரை துன்புறுத்தினால் அவதார நாயகனும் அதற்கான பலனை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பதை விளக்கும் காட்சி, குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் படிப்பினை.

சூர்ப்பனகையின் பழிவாங்கும் படலம்

கைகேயிக்கு தசரதன் இரண்டு வரங்களை கொடுப்பதற்கு காரணமான சம்பவமும், காட்சியானதே சூர்ப்பனகை கணவர் வித்யோஜிக்வா.

இவர் ராவணனைவிட சிறந்தவராக இருப்பதை விரும்பாமல் அவரை கொன்றுவிடுகிறார் ராவணன். சூர்ப்பனகை, வித்யோத்ஜிக்வாவுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகள் ராவணனை பழி தீர்க்க தவம் செய்கின்றனர்.

தர்ப்பைப் புல் காட்டில் அமர்ந்திருந்த அவர்களின் தலைக்கு மேலாகப் புல் வளர்ந்திருக்க, புல்லை அறுப்பதற்கு அங்கு வரும் ராம, லட்சுமணன் அவர்களின் தலையை அறியாமல் கொய்துவிடுகின்றனர்.

சகோதரன் ராவணனால் கணவனும் இறந்து, தன்னுடைய மகன்களையும் ராம, லட்சுமணனால் இழக்கும் சூர்ப்பனகை மூவரையுமே பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக சீதையைப் பயன்படுத்திக் கொள்வதையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

பொதுவாக ராமாயணத்தில் நடக்கும் சில சம்பவங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் நாடகங்களிலிருந்து அந்த சம்பவங்களுக்கு காரணமான விஷயங்களை நாட்டியத்தின் மூலம் காட்சிப்படுத்தியது புதிய அனுபவம்.

ஷிவாலி அரோரா, மஹாதர்ஷினி, ஆர்யா, காவ்யா, ராமலஷ்மி, சம்யுக்தா, தயானந்த் உள்ளிட்ட 25 குழந்தைகளுக்கும் முறையாக பயிற்சி அளித்து அவர்களை தயார்ப்படுத்தியிருக்கும் சஷ்மிதா அரோராவின் கலையை அவரின் ராமபக்தி நிச்சயம் காப்பாற்றும்.v

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x