Last Updated : 14 Mar, 2019 10:33 AM

 

Published : 14 Mar 2019 10:33 AM
Last Updated : 14 Mar 2019 10:33 AM

நாளை பங்குனி மாத தர்ப்பணம்; மறக்காதீங்க!

நாளைய தினம் 15.3.19 வெள்ளிக்கிழமை, பங்குனி மாதம் பிறக்கிறது. இந்த நாளில், மாதப் பிறப்பில், தர்ப்பணம் செய்யவும் முன்னோரை ஆராதிக்கவும் மறக்காதீர்கள்.

மாதந்தோறும் தமிழ் மாதப் பிறப்பில் தர்ப்பணம் செய்ய வலியுறுத்துகிறது தர்மசாஸ்திரம். அதேபோல், மாதந்தோறும் அமாவாசையிலும் கிரகண நாளிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் ஆச்சார்யர்கள்.

இந்த ஜென்மத்துக்கான, இந்த நம் பிறவிக்கான மிக முக்கியமான கடன்… அதாவது கடமை… முன்னோர் ஆராதனைதான். பித்ருக்களை ஆராதிக்க ஆராதிக்க, அவர்களை வணங்கி வழிபட வழிபட, பித்ருக்கள் சாபம் அனைத்தும் நீங்கப்பெறலாம் என்பது ஐதீகம்.

அதேபோல், நாமும் நம் சந்ததியும் சிறக்கவும் செழிக்கவும் வாழலாம். நம் குடும்பத்தில். அரணாக இருந்து நம்மையும் நம் வம்சத்தையும் பித்ருக்கள் வாழ அருளுவார்கள் என்பது சத்தியம்.

இதோ… நாளைய தினம் 15.3.19 பங்குனி மாதப் பிறப்பு. தமிழ் வருடத்தின் கடைசி மாதம் இது. தெய்வத் திருமணங்கள் பலவும் நிகழ்ந்தது இந்த பங்குனி மாதத்தில்தான் என்கின்றன புராணங்கள். பங்குனி மாதப் பிறப்பில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் புகைப்படங்களுக்கு பூ சார்த்தி, தீபதூபம் காட்டுங்கள். முடிந்தால், அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியம் செய்யுங்கள். பிறகு காகத்துக்கு வழங்குங்கள்.

அதேபோல், முக்கியமாக, முன்னோரை நினைத்து ஒரு நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நாம் செய்யும் இந்தச் செயல்களில், குளிர்ந்து போய், நம்மையும் நம் குடும்பத்தையும் நம் சந்ததியையும் சீரும்சிறப்புமாக, வளத்துடனும் நலத்துடனும் வாழச் செய்வார்கள், பித்ருக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x