Published : 24 Mar 2019 11:00 AM
Last Updated : 24 Mar 2019 11:00 AM
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பங்குனி மாதத்தில், வீடு மாறலாமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ஆமாம். பங்குனியில் வீடு மாறக்கூடாது.
என்ன காரணம்? ஏன் மாறக்கூடாது?
மொத்தம் 12 மாதங்கள் இருக்கின்றன. தமிழ் மாதங்களில் நான்கு மாதங்கள், 'முக்கு மாதங்கள்’ எனப்படுகின்றன. அதாவது முனை மாதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி இந்த நான்கு மாதங்களும் ‘முக்கு மாதங்கள்’.
இந்த நான்கு மாதங்களிலும் வாஸ்து பகவான் எழுந்தருளமாட்டார். அதாவது இந்த நான்கு மாதங்களிலும் வாஸ்து பகவான் ஆட்சி செய்யும் நாட்கள் என்பதே இல்லை. வாஸ்து பகவானுக்கு உரிய நாட்களே இல்லை என்று சொல்லலாம்.
அதனால்தான், ஆனி மாதம், பங்குனி மாதம், மார்கழி மாதம், புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களிலும் வீடு மாறுதல் முதலானவற்றைச் செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது, ஒரு வீடு புதிதாகக் கட்டப்பட்டு, அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிபோகிறோம் என்றால், அங்கே பூஜைகள் எதுவும் செய்திருக்க மாட்டோம். அப்படியே செய்வதாக இருந்தாலும் ‘முக்கு மாதம்’ பங்குனியில் பூஜைகள் எதுவும் செய்யக்கூடாது. கிரகப்பிரவேசம் முதலான வைபவங்களை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைப்பதே சிறப்பு. எனவே பூஜை செய்யாத வீட்டுக்கு குடிபோகக் கூடாது.
அதேசமயம், பழைய வீட்டில் இருந்து வேறொரு பழைய வீட்டுக்கு மாறுவதாக இருந்தால், தாராளமாக மாறலாம்.
ஏன்? என்ன காரணம்?
பழைய வீட்டில், கட்டப்பட்ட சமயத்தில், அல்லது வேறொரு தருணங்களில், கிரகப்பிரவேச பூஜை மற்றும் சில பூஜைகளைச் செய்திருப்பார்கள். எனவே ஏற்கெனவே பூஜை செய்யப்பட்ட வீட்டில், பழைய வீட்டில் குடிபோவதில் தவறேதும் இல்லை. இதனால் பாதகம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.
ஆகவே, புதிய வீட்டுக்குக் குடிபோவதை பங்குனி மாதத்தில் தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்துகிறது ஜோதிட சாஸ்திரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT