Last Updated : 20 Jan, 2019 10:57 AM

 

Published : 20 Jan 2019 10:57 AM
Last Updated : 20 Jan 2019 10:57 AM

அசுர மயில் முருகன் அல்லல் தீர்ப்பான்; திருப்பம் தருவான் திருப்பட்டூர் முருகன்!

தைப்பூசம் ஸ்பெஷல்

தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில்கள் இருப்பது போல், ஊரில் ஐந்தாறு இடங்களிலேனும் முருகனுக்குக் கோயில் இருப்பது உறுதி. அதேபோல், எல்லா சிவாலயங்களிலும் பிராகாரத்தில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், விசேஷமான பரிவாரத் தெய்வங்களாக அந்தக் கோயில்களில் வணங்கப்படுவதையும் பார்க்கலாம்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். குன்றிருக்கும் இடம் என்றில்லை. எல்லா ஊர்களிலும் குமரன் குடிகொண்டு, குடிமக்களை குறைவின்றி காத்துவருகிறான்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தனி சக்தியும் சாந்நித்தியமும் உண்டு. அதேபோல், சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் முருகப்பெருமானும் வரப்பிரசாதி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

இப்படி சிவாலயங்களில் இருக்கும் முருகன், முக்கியத்துவம் வாய்ந்தவராக போற்றி வணங்கப்படும் ஆலயங்கள் ஏராளம். அதில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலும் உண்டு.

பிரம்மாவுக்குப் படைப்புத் தொழிலைத் தந்தார் சிவபெருமான். தனக்கு உள்ளது போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள். இதனால் தலைகால்புரியாமல் ஆடினார் பிரம்மா. ‘நீயென்ன பெரிய ஆளா?’ என்று சிவனாரையே கேட்டார். கொதித்துப் போன சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார். இதனால் தேஜஸ் இழந்து, கலங்கித் தவித்த பிரம்மா, சிவபெருமானிடம் , ‘மன்னியுங்கள். சாப விமோசனம் கொடுங்கள்’ என்று கேட்டார். துவாதச லிங்கங்கள் அமைத்து வழிபடு. பார்க்கலாம் என்றார் சிவனார்.

துவாதச என்றால் 12. எனவே பனிரெண்டு தலங்களில் உள்ள சிவலிங்கத்தை, மகிழம்பூ வனமாக இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து, தீர்த்தத்தையும் உருவாக்கி, அனுதினமும் பூஜைகள் செய்துவந்தார். இந்தத் தீர்த்தம்... பிரம்ம தீர்த்தம் என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறது. இதில் மகிழ்ந்த சிவபெருமான், ’இங்கு வரும் என் பக்தர்களுக்கு விதி இருப்பின் விதியைக் கூட்டி அருள்வாயாக. விதியை சற்றே நல்லவிதமாக மாற்றி அருள்வாய்’ என்று ஆணையிட்டார். அதன்படி, இங்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தையே திருத்தி அருள்கிறார் பிரம்மா.

தனிச்சந்நிதியில் பிரம்மா குடிகொண்டிருக்கும் கோயில், வாழ்வில் திருப்பங்கள் தரும் திருத்தலம் என்று திருப்பட்டூர் போற்றப்படுகிறது.  திருப்பட்டூருக்கு திருப்பிடவூர் என்றும் திருப்படையூர் என்றும் பெயர்கள் இருந்திருக்கின்றன. காலப்போக்கில், திருப்பட்டூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஆமாம்... புராண காலத்தில், திருப்பிடவூர், திருப்படையூர் என்று பெயர் அமைந்ததற்குக் காரணகர்த்தா யார் தெரியுமா?

படைகள் திரட்டி, சூரனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமானே அதற்குக் காரணம்.

அட... அப்படியா?

ஆமாம்... முருகப்பெருமான், படைகளை திரட்டிக் கொண்டு செல்லும் போது, வழியில் தங்கியிருந்த தலங்களை பிடவூர் என்றும் படையூர் என்றும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்படி தன் படையினருடன் முருகப்பெருமான் இங்கே தங்கியிருந்தார் எனும் பெருமையும் வலிமையும் கொண்டு திகழ்கிறது திருப்பட்டூர் திருத்தலம்!

வேல் கொண்டு நம் வினைகளைத் தீர்க்கும் வேலவன், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக, சுப்ரமண்யராக அழகு ததும்பக் காட்சி தருகிறார். அவரின் சந்நிதியில் வள்ளிதெய்வானையுடன் நிற்கிற அழகையும் அந்தக் கல்சிற்பத்தில் தெரிகிற திரும்பிப் பார்க்கிற மயிலின் ஒயிலையும் கண்டு சிலிர்த்துவிடுவீர்கள் என்று விவரிக்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.

குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு மகேஸ்வரன் என்கிறோம். அப்படிப் பார்த்தால், முருகப்பெருமானும் ஒருவகையில் நமக்கெல்லாம் குருவே!

ஆமாம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் அல்லவா அவன். பிரணவ மந்திரத்தின் பொருளை எடுத்துரைத்த மந்திரமூர்த்தி அல்லவா! எனவே இங்கே குரு ஸ்தானத்தில், குரு அந்தஸ்தில், முருகப்பெருமான் கோலோச்சுகிறார்.

குரு பிரம்மாவுக்கு பின்னே உள்ள சந்நிதியில் குருவாக, ஞானகுருவாகவும் படை வீரனாகவும் இருந்து நம் எதிரிகளையெல்லாம் பந்தாடித் தள்ளி அருள்பாலிக்கிறார் நமக்கு!

முருகப்பெருமானின் வலது திருக்கரத்தின் கீழே மயிலின் திருமுகம் அமைந்திருக்கிற சிலையைத்தான் பல கோயில்களிலும் தரிசிக்கலாம். இதை தேவ மயில் என்பார்கள். இங்கு, கந்தபிரானின் இடது கரத்தின் கீழே, மயிலின் திருமுகம் அமைந்திருப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத ஒன்று சிலாகித்துப் பூரிக்கின்றனர் முருக பக்தர்கள்.இது, அசுர மயில் என்கின்றன ஞானநூல்கள்.

ஸ்ரீசுப்ரமண்யர், ஞானகுரு. பூமிகாரகன். செவ்வாய்க்கு அதிதேவதையும் முருகக் கடவுள்தான்! எனவே, இந்தத் தலத்து முருகப் பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கந்தனுக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் அல்லது சஷ்டி நாளில் அல்லது எப்போது, எந்த நாளில் வந்து வழிபட்டாலும், எதிரிகள் தொல்லை ஒழியும். எடுத்த காரியம் தங்குதடையின்றி நடந்தேறும்.

வாரிசு இல்லை எனும் ஏக்கம் நீங்கி, பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறலாம். கோர்ட், கேஸ் என வழக்கில் சிக்கி வாழ்க்கையில் தவிப்பவர்களுக்கு வழக்கில் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி.

செவ்வாய்க்கிழமை மற்றும் மாதந்தோறும் வருகிற சஷ்டி அல்லது கிருத்திகை நட்சத்திர நாளில், முருகக்கடவுளை வணங்குங்கள். வஸ்திரம் சார்த்தி, அரளிப்பூமாலை அணிவித்து வேண்டுங்கள். செவ்வாய் முதலான சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் வீட்டில் எப்போது குடிகொண்டிருக்கும் என்பது சத்தியம் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

புதிதாக தொழில் துவங்குபவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் என்று கலங்கித்தவிப்பவர்கள், வளர்பிறையில் வரும் சஷ்டி அல்லது கிருத்திகை நாளில் வந்து, வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வியாபாரம் செழித்து வளரும்.

அதேபோல், சொந்த வீடு எனும் கனவும் லட்சியமும் ஆசையும் விருப்பமும் இல்லாதவர்கள் எவரேனும் உண்டா என்ன? செவ்வாய், சஷ்டி, கிருத்திகை அல்லது அவர்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் வேஷ்டி & புடவை சார்த்தி, வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, மனதார வழிபடுங்கள். நீங்கள் வாங்கிய இடத்தில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அவை விலகிவிடும். நிலம் தொடர்பான வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ‘இடமும் இல்லை, மனையும் கிடையாது’ என்பவர்கள், இடமோ வீடோ வாங்குகிற யோகம் விரைவிலேயே வாய்க்கும்.

அசுரமயில் கொண்டு காட்சி தரும் முருகப்பனை வணங்குங்கள். துணையிருப்பான் வேலவன். அல்லல்கள் அனைத்தையும் போக்குவான். எதிர்ப்புகள் அனைத்தையும் நீக்குவான்! 

தைப்பூச நன்னாளில், திருப்பம் தரும் திருப்பட்டூருக்கு வாருங்கள். தலையெழுத்தையே திருத்தி அருளும் பிரம்மாவை தரிசித்துவிட்டு, அப்படியே நல்ல நல்ல திருப்பம் தரும் முருகக் கடவுளையும் வணங்குங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x