Published : 21 Aug 2014 12:17 PM
Last Updated : 21 Aug 2014 12:17 PM

விநாயகர் நவராத்திரி

விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்ற சொல் வழக்கு, பல காலங்களாக இருந்துவருகிறது. வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், ஆகமங்கள், மந்திர சாஸ்திரங்கள் அனைத்துமே ஸ்ரீமகாகணபதியின் பெருமைகளை சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரும் ஒவ்வொரு காரியத்தைத் தொடங்கும்போதும், அவை இடையூறின்றி நிறைவேறுவதற்கு கணபதியை வழிபடுவது நமது நாட்டுப் பழக்கம்.

விரதகல்ப விதியின்படி விநாயகரை வழிபடுவதற்கு எளிய வகை விரதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விநாயகரை எளிய வகையிலும் விரதங்கள் இருந்தும் வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

ஒரு பக்தன் வெல்லத்தால் விநாயகரைச் செய்து வழிபட்டபோது, அவருக்கு நிவேதனம் செய்ய ஒன்றுமில்லை என்று தவித்தான். அப்போது விநாயகர் எழுந்தருளி, என் தொடையில் உள்ள சிறு துளி வெல்லத்தை எடுத்துக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

ஒரு ஆண்டில் விநாயகர் குறித்த விரதங்களாக விநாயக சக்தி விரதம், துருவ கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம்,வெள்ளிக்கிழமை விரதம் ஆகியன வருகின்றன. ஆனால் அம்பிகைக்கு நவராத்திரி விரதம் இருப்பதுபோல விநாயகருக்கு ஒன்பது நாட்களுக்கு விரதம் இருப்பதையும், விநாயக நவராத்திரி ஒன்று வருவதையும் யாரும் கொண்டாடுவதில்லை.

விநாயக நவராத்திரியின் சிறப்பு

தூர்வா என்ற அருகம்புல்லை விநாயகர் பார்த்துவிட்டாலே மகிழ்ச்சி கொள்வார். அந்த அருகம்புல்லை மேடையாக அமைத்து அதன்மீது விநாயகரை எழுந்தருளச் செய்து முக்கனிகள் படைத்து மோதகம் மற்றும் பணியாரங்கள் படைத்து ஒவ்வொரு நாட்களும் ஒரு விநாயக ரூபத்தை வழிபடுவது சிறப்பு.

விநாயக நவராத்திரி விழா ஆகஸ்ட் 20 ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. விரத விதிப்படி விநாயகர் சதுர்த்திக்கு முதல் ஒன்பது நாட்கள் இந்த விரதங்களைச் செய்ய வேண்டும்.

முதல் நாள்

பக்தி கணபதியாக மாலை வேளையில் கலசம் வைத்து விநாயகரை வர்ணித்துத் துதிப் பாடல்கள் பாடி மோதகம் படைத்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்தக் கணபதியை வழிபடுவதால் அனைவருக்கும் ஆன்மிக நாட்டமும் இறை வழிபாட்டால் வெற்றிகொள்வது எப்படி என்ற மனநிலையும் கைகூடும்.

இரண்டாம் நாள்

வியாழக்கிழமை பால கணபதியாக வழிபட வேண்டும். இந்த நாளில் குழந்தை வடிவத்தில் விநாயகர் எழுந்தருளிக் குழந்தைகளின் நன்மைக்கு அருள் தருகிறார்.

மூன்றாம் நாள்

வெள்ளிக்கிழமை லக்ஷ்மி கணபதியாகத் தோன்றுகிறார். இவரை 16 லக்ஷ்மிகளின் அருள் கிடைக்க வழிபாடு செய்ய வேண்டும். இல்லத்தில் வறுமை விலகி பொருள் நிலை உயர்வதற்கு வழிபடுவது நல்லது.

நான்காம் நாள்

தருண கணபதியாக அருள்தருகிறார். வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை இழந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கான தருணங்களைப் பெற இந்த கணபதியை வழிபடலாம்.

ஐந்தாம் நாள்

சந்தான கணபதியாகத் தோன்றுகிறார். பிள்ளைச் செல்வம் கிடைக்காதவர்கள் சந்தான கணபதியை இந்த நாளில் வழிபட்டு குலம் விருத்தி அடைய வழிபடலாம்.

ஆறாம் நாள்

நர்த்தன கணபதி வழிபாடு. மகா கணபதி நர்த்தன கணபதியாகத் தோன்றுகிறார். இந்தக் கணபதியை வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்கலாம்.

ஏழாம் நாள்

ருண மோட்சன கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத கடன் பிரச்சினை இருப்பவர்கள் தொழில் முடக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இந்த கணபதியை வழிபட்டுத் தீராத கடன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

ருண மோட்சன கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத கடன் பிரச்சினை இருப்பவர்கள் தொழில் முடக்கம் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் இந்த கணபதியை வழிபட்டுத் தீராத கடன் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்

எட்டாம் நாள்

சங்கடஹர கணபதியாகத் தோன்றுகிறார். வாழ்க்கையின் தீராத சங்கடங்கள், எதிரித் தொல்லைகள் இருப்பவர்கள் இந்தக் கணபதியை வழிபடுவதால் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து அமைதி காணலாம்.

ஒன்பதாம் நாள்

சொர்ண கணபதியாகத் தோற்றம் அளிக்கிறார். இந்தக் கணபதியை வழிபடுவதால் சொர்ண லாபம் என்ற பொன் சேர்க்கையும் பெண்களுக்கு ஆபரணங்கள் அணியும் பாக்கியமும் கிடைக்கப்பெறும். முக்கியமாக வியாழக்கிழமை மாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டு மணிவரை குபேர காலம் என்ற சொல்வழக்கு உள்ளது. இந்தக் காலத்தில் சொர்ண கணபதியை வழிபடுவதால் செல்வசேர்க்கையும் குபேர நிதி தரிசனமும் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாக உள்ளது.

பத்தாம் நாள்

விநாயகர் சதுர்த்தியன்று மகா கணபதியாக வழிபட்டு அவருக்கு புனர்பூஜை செய்து விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் வழக்கம்போல செய்து விநாயகரை வணங்க வேண்டும்.

இந்த நாட்களில் ஒன்பது விநாயகர் குறித்த துதிகளையும் தியானங்கள் மற்றும் மூலமந்திரங்களையும் கூறி வழிபடவேண்டும். விநாயக நவராத்திரியைக் கொண்டாடுவோம். வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x