ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம் கோலாகலம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர செப்புத் தேரோட்டம் கோலாகலம் 
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழாவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் நாள் விழாவான ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவை நடைபெற்றது. நேற்று இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

இன்று(ஏப்ரல் 11) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7.05 மணிக்கு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக திவ்ய தம்பதிகள் ஆண்டாள் ரெங்கமன்னார் ராஜ அலங்காரத்தில் செப்புத் தேரில் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா கோபாலா' கோஷம் முழங்க வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஆண்டாள் சந்நிதி முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் ஆகியோர் திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in