

பழநி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலில் இன்று (பிப். 10) முதல் வரும் 12-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இன்று இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை தைப்பூசத்தன்று மாலை நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் திரண்டு வருகின்றனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வார விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு திரண்டனர். கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசையில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மலையேறும் பக்தர்களுக்கு சுக்கு காபி, குழந்தைகளுக்கு பால் மற்றும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பசியாறும் வகையில் தேவஸ்தானம் சார்பில் பிஸ்கட் பாக்கெட்டுகள், தொன்னையில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் குறைந்தது 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சென்றனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி, 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். அதன்படி, இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை விரைவு தரிசனக் கட்டணச் சீட்டுகளான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு பழநி நகர் மற்றும் புறநகர் பகுதியில் 100 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஐஜி, 2 டிஐஜி, 5 எஸ்.பி.க்கள் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.