ஆடி அமாவாசை விழா: சதுரகிரி கோயிலுக்கு செல்ல 10 நாட்கள் அனுமதிக்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

பக்தர்கள்
பக்தர்கள்
Updated on
1 min read

வத்திராயிருப்பு: ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 10 நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்த 4,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். 2015ம் ஆண்டு சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, பக்தர்கள் மலையேற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் என மாதம் 8 நாட்கள் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டு, மலைக்கோயிலில் இரவில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டது. ஆடி அமாவாசை, நவராத்திரி ஆகிய விழா காலங்களில் 10 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட பின், பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு 6 நாட்களும், நவராத்திரி விழாவுக்கு 3 நாட்களும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழாவுக்கு ஆகஸ்ட் 1 முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க 10 நாட்கள் அனுமதி வழங்கவும், ஆடி அமாவாசை அன்று இரவில் வழிபாடு நடத்தவும் அனுமதி வழங்க இந்து சமய அறநிலையத்துறை, மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வி.ஹெச்.பி திருக்கோயில்கள் திருமடங்கள் பிரிவு தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக் கூறுகையில், "சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு குறுகலான கரடு முரடான மலைப்பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்த செல்ல வேண்டும். ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி வருகின்றனர்.

ஆடி அமாவாசைக்கு கடந்த காலங்களில் 10 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி உள்ளதால், குறுகலான மலைப்பாதையில் நெரிசல் காரணமாக அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி மலையேற 10 நாட்கள் அனுமதி வழங்க மதுரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in