Last Updated : 07 May, 2018 09:52 AM

 

Published : 07 May 2018 09:52 AM
Last Updated : 07 May 2018 09:52 AM

ஜோதிடம் அறிவோம்! 37 இதுதான்... இப்படித்தான்! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்களேன்..!

நாம் சென்ற பதிவில் அபிஜித் நேரத்தை பற்றிப் பார்த்தோம், இந்த நேரத்தைப் பயன்படுத்தி அனைத்து சுப காரியங்களையும் செய்யலாம் என்றும் அறிந்துகொண்டோம்.

இதுபோன்று வேறு ஏதும் சுப நேரம் உண்டா?

ஆம் இருக்கிறது.

ஒருநாளில், இரண்டுமுறை இந்த முகூர்த்த நேரம் வரும்.

அது என்ன முகூர்த்தம்? அதன் பெயர் “கோதூளி லக்னம்.”

காலையில் 24 நிமிடமும், மாலையில் 24 நிமிடமும்

இந்த முகூர்த்தம் ஒவ்வொரு நாளும் வரும்.

சூரியன் உதித்த முதல் 24 நிமிடமும், சூரியன் அஸ்தமித்த பின் உள்ள 24 நிமிடமும் கோதூளி லக்ன நேரம் எனப்படும்.

அது என்ன கோதூளி லக்னம்?

கோ என்றால் பசு; தூளி என்றால் தூசு,

பசுக்கள் காலையில் கூட்டமாக மேய்ச்சலுக்குப் போகும் போது உண்டாகும் தூசி படலம் சூரியனின் வெளிச்சத்தையே மறைத்துவிடுமாம்.

இப்படி ஏற்படும் தூசி படலத்தால், கிரகங்கள் தரும் எந்த பாதிப்பையும்(நன்மை,தீமை) இந்தப் படலம் தடுத்துவிடும் ஆற்றல் உள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே, இந்த நேரத்தில் செய்யப்படும் எந்த சுபகாரியங்களும் எந்தப் பழுதும் இல்லாமல் முழுமையடையும் என்பது நம்பிக்கை.

இது மாலை நேரத்திற்கும் பொருந்தும்( மாலையில் மேய்ச்சலில் இருந்து பட்டிக்குத் திரும்பும் போதும் இது நிகழும்).

இந்த முகூர்த்தத்தை அனைத்து சுப காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். திருமணம், கிரஹப்பிரவேசம், ஆன்மிகப் பயணம் என சகலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு, நல்ல நல்ல பலன்களைப் பெறலாம்.

மிக முக்கியமாக கல்வி பயல, மந்திரங்கள் ஜபிக்க, பூஜாபலன்கள் நம்மை முழுமையாக வந்தடைய, இறைவனைத் தரிசிக்க, நேர்த்திக்கடன் செலுத்த, பரிகாரங்கள் செய்ய, பரிகாரங்கள் தொடர, இந்த நேரத்தை பயன்படுத்துங்கள், அனைத்தும் வெற்றியாகவே நடந்தேறும்.

இதை தவிர “பிரம்ம முகூர்த்தமும்” மிக முக்கியமானதே என்பதை அறிவீர்கள்தானே.

பிரம்ம முகூர்த்தம் என்பதைப் பலரும் காலை 4-30 முதல் 6 மணி வரை என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அது தவறு, பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 மணிமுதல் 4-30 வரையிலான நேரம் என்பதே சரி. இதுவும் பிழையில்லாத முகூர்த்தமே. இதில் அனைத்து சுப காரியங்களும் செய்யலாம், (பரிகார ஹோமங்கள் தவிர).

இந்த பிரம்ம நேரத்தில்தான் அனைவரும் தூக்கம் கலைந்து எழ வேண்டும். பிரம்ம நேரத்தில் எழுபவர்களுக்கு வாழ்நாளில் கஷ்டம் என்பது வராது. வந்தாலும் பாதிப்பைத் தராமல் எளிதாக கடந்து சென்றுவிடும்.

தடைகளே வாழ்க்கையாக உள்ளதா?

திருமணத்தடை, கல்வித்தடை, வேலையில் தடை, தொழில் நிலையில்லாமை, புத்திரபாக்கியமின்மை, வியாபாரத்தில் வளர்ச்சியின்மை, பணத்தட்டுப்பாடு, கடன் தீராமல் இருப்பது, கொடுத்த கடன் வராமல் இருப்பது... என்று வாழ்க்கை முழுவதும் தடையாகவே இருக்கிறதா?

இப்படிப் பலவித தடைகளையும் நீக்கி, வாழ்வில் சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான்.

அதிகாலையில் “பிரம்ம முகூர்த்தத்தில்” எழுந்துவிடுங்கள்.

சரி...எழுந்து என்ன செய்வது?

இந்த நேரத்தில் எழ ஆரம்பித்துவிட்டாலே நான் ஏதும் சொல்லாமலே உங்கள் மனமானது எண்ணங்களை ஒருமுகப்படுத்தும். அன்றைய வேலைகளைப் பற்றி மனம் தானாகத் திட்டமிடும்.

அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். இந்த சிந்தனைதான் உங்கள் வளர்ச்சி. இது யாரும் சொல்லி வரவேண்டியதில்லை, உங்களுக்குள் இருக்கும் உங்கள் சக்தியை உணரவைக்கும் நேரம்இது. அற்புதமான தருணம் இது!

(தூக்கத்தில் இருந்து) எழுந்துதான் பாருங்களேன். வாழ்க்கை முழுவதும் எழுச்சிதான். விடியல்தான். சூர்யோதயம்தான். சுபிட்சம்தான்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

அடுத்த அத்தியாயம் வரும் 9.5.18 புதன்கிழமை அன்று வெளிவரும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x