Last Updated : 04 Apr, 2018 09:47 AM

 

Published : 04 Apr 2018 09:47 AM
Last Updated : 04 Apr 2018 09:47 AM

ஜோதிடம் அறிவோம்! 28 இதுதான்... இப்படித்தான்! எந்தநாளில் எண்ணெய்தேய்த்து குளிக்கணும் தெரியுமா?

ஒவ்வொரு முறை தாம்பத்யத்திற்கும் நல்லநேரம் பார்க்க வேண்டுமா? என சென்ற பதிவில் கேட்டிருந்தோம்.

ஆமாம். அதற்கு முன்னதாக, நீங்கள் அறிந்த விஷயத்தை ஆனால் அதுகுறித்து ஆராயாமல் விட்டதை இப்போது பார்ப்போம்.

சரித்திர காலத்தில், அதாவது அரசர்கள் காலத்தில் தர்மம், நீதி, நேர்மையுடன் ஆட்சி செய்த ஏராளமான அரசர்களை அறிந்திருப்பீர்கள்.

அவர்கள் அரண்மனையில் அந்தப்புரம் இருந்ததையும் அறிவீர்கள். தர்மப்படி ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் அந்தப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்?

அதாவது, நம் குடும்ப வாழ்வியல் படி, நினைத்தவுடன் மனைவியுடன் இருப்பதுபோல் மன்னர்கள் அரசியின் அரண்மனைக்குள் செல்ல முடியாது.

ஏன்? அரசனும் அரசியும் எப்போது சந்திக்கலாம்? எப்போது தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம் என்பதை ராஜகுரு எனும் பல கலைகள் (ஜோதிடம் உட்பட) அறிந்த அந்த அறிஞர் அனுமதித்தால் மட்டுமே சந்திக்கமுடியும். உறவு வைத்துக் கொள்ள முடியும்.

ஏன்? எதற்காக இப்படி?

அரசை ஆளும் அடுத்த வாரிசு எல்லாவகையிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் எனவே, ராஜகுரு குறித்துக்கொடுக்கும் நேரத்தில் மட்டுமே ராணியை சந்திக்கமுடியும். அது ஒரு குறுகிய நேரமாக இருக்கும். அந்த நேரம் முடிந்த உடன் மெய்க்காவலர்களால் பிரிக்கப்படுவார்கள். அந்த நேரத்தில் உருவாகும் குழந்தை மட்டுமே ராஜ வாரிசாக முடியும்.

எனவே மன்னனின் இச்சை தீர உண்டாக்கப்பட்டதே அந்தப்புரம்!

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். எந்த நேரத்திலும் தாம்பத்யம் என்பது தவறு. ஒவ்வொரு முறைக்கும் (குழந்தை வேண்டுபவர் மட்டும்) நல்ல நேரம் பார்க்கப்படவேண்டும்.

இப்படி பெறும் குழந்தை, நல்ல ஆரோக்கியம், அறிவு, சமயோசித புத்தி, சாதிக்கும் வல்லமையோடு பிறக்கும்.

குறைந்தபட்சம் சாந்திமுகூர்த்தம் நேரம் குறித்து தாம்பத்யம் ஆரம்பித்தால் அனைத்தும் சுபமே என்கிறது சாஸ்திரம்.

ஆனால் யாரும் திருமணத்திற்கு நேரம் குறிக்கிறார்களே தவிர, இந்த நிசேகம் என்னும் சாந்தி முகூர்த்தத்திற்கு அதாவது அடுத்தடுத்து நிகழ்கிற தாம்பத்யங்களுக்கு நேரம் பார்ப்பதில்லை,

நான் கூறுவது ஒன்றேஒன்றுதான். கிரகங்கள் துணையில்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு நிகழ்வும் கிரகங்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் எல்லாம் சுபமே. எப்போதும் நலமே!

சென்ற பதிவில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் பற்றி சொல்லியிருந்தேன். நிறையபேர் அதற்கு ஏதும் நாள் கிழமை பார்க்கப்பட வேண்டுமா என கேட்டிருந்தார்கள்.

அவர்களுக்காக...

பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியல் கட்டாயம் எடுக்க வேண்டும்.

ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் குளியல் எடுக்கவேண்டும்.

ஏன் பெண்கள் வெள்ளிக்கிழமை?

ஆண்கள் சனிக்கிழமை?

நல்லெண்ணெய் சனிபகவானின் அம்சம்.

வெள்ளிக்கிழமை பெண்கள் நல்லெண்ணெய்க் குளியல் எடுப்பது அவர்களுக்குள் உள்ள சோம்பல், தரித்திரம், அவநம்பிக்கை, அவச்சொல் போன்றவை நீங்கி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் வலிமை உண்டாகும், உடல்வலிமை உண்டாவதால் பார்க்கும் வேலையில் சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உண்டாகும்.

(கடின உழைப்பிற்கு சனிபகவானே காரகன்)

ஒரு குறிப்பு ஆண்கள் சனிக்கிழமை அன்று பிறந்திருந்தால், சனிக்கிழமையை தவிர்த்து புதன்கிழமை அன்று எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.

ஜென்ம கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

இது பெண்களுக்கு பொருந்தாது.

இது போன்ற தகவல்களையும் நட்சத்திர விவரங்கள் என்ற தலைப்பில் பிறகு பார்ப்போம்.

இப்போது பரிகாரங்களைப் பார்க்கலாம்,

செவ்வாய் புதனோடு இணைய தாம்பத்ய பலவீனத்தைத் தருவார் என பார்த்தோம் அல்லவா. அதற்கான பரிகாரங்களை இப்போது பார்க்கலாம்.

உடற்பயிற்சி, யோகாசனம் உடல் வலிவைத் தரும்,

மகாவிஷ்ணுக்கு துளசிமாலை அணிவித்தல், சக்கரத்தாழ்வாருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தல் முதலான வேண்டுதல்கள் நல்ல பலனைத்தரும்.

கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல், பச்சைப்பயறு சுண்டல் செய்து தானம் செய்தல் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்!

பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு (புதன் - பதின்ம வயது பெண் குழந்தைகளை குறிப்பவர்) உதவுதல், ஆடை வழங்குதல் எல்லா நன்மைகளையும் தரும்.

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது நல்ல பலனைத்தரும்.

இங்கு நான் குறிப்பிடும் பரிகாரங்கள் எளிமையாக இருப்பதால். “இதனால் என்ன நன்மை வரப்போகிறது என்பவர்களுக்கும், இந்த பரிகாரங்கள் எப்படி இல்லற வாழ்வுக்கு துணை நிற்கும் என்பவர்களுக்கும்” ...

இந்த பரிகாரங்களைச் செய்து பாருங்கள்... கை மேல் பலன் பெறுவீர்கள் என்பது உறுதி!

மூர்த்தி சிறுசுதான்; ஆனாலும் கீர்த்தி பெருசு!

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x