Last Updated : 18 Mar, 2024 11:23 AM

 

Published : 18 Mar 2024 11:23 AM
Last Updated : 18 Mar 2024 11:23 AM

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: மார்ச் 24-ம் தேதி தேரோட்டம்

பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ( மார்ச் 18 ) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி திரு ஆவினன் குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று ( மார்ச் 18 ) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. திரு ஆவினன் குடி, மலைக்கோயிலில் மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக் குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக் குமார சுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் தண்டாயுத பாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திரளான பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

ஆறாம் நாளான மார்ச் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏழாம் நாளான மார்ச் 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரி முத்து, கந்த விலாஸ் உரியைாளர் செல்வ குமார், கண்பத் கிரேண்ட் ஹரி ஹர முத்து, சரவண பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x