Published : 17 Jan 2024 05:22 AM
Last Updated : 17 Jan 2024 05:22 AM

மாட்டுப் பொங்கலையொட்டி 2 டன் காய்கனிகள், இனிப்புகளால் பெரிய கோயில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் 2 டன் எடையில் காய்கனிகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த நந்தியம் பெருமான்.(அடுத்த படம்) மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கோபூஜை.படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, மாட்டுப் பொங்கலானநேற்று அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை நடைபெற்றது.

பின்னர், காலை 9 மணிக்கு உருளை, கத்திரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை,போன்ற பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி என பல வகையான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் மலர்கள், வெண்ணெய் என 2 டன் எடையில் பல்வேறு பொருட்களைக் கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர், அங்கு 108 பசுக்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து, பட்டுவஸ்திரம் போர்த்தி கோ பூஜை நடைபெற்றது. விழாவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாலையில், நந்தியம் பெருமானுக்கு அணிவிக்கப்பட்ட காய்கனிகள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x