சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்: டிச.26-ல் தேர் திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்: டிச.26-ல் தேர் திருவிழா
Updated on
1 min read

கடலூர்: உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்று விழா இன்று (டிச.18) நடந்தது. வருகின்ற 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர் திருவிழாவும், வருகின்ற 27-ம் தேதி புதன்கிழமை மார்கழி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.

சைவத் திருத்தலங்களில் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாத தீட்சதர் மேளதாளங்கள் முழங்க தேவாரம் திருவாசகம் ஓதிட வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கொடியேற்றத்தை முன்னிட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை (டிச.19) சுவாமிகள் வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, டிச.20-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, டிச.21-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, டிச.22-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், டிச.23-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், டிச.24-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது. டிச.25-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாடனார் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. டிச.26-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

டிச.27-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிச.28-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in