

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுரேஷ் மூப்பனார் கூறியது."திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை மகோத்சவ விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ம் தேதி ஆராதனை விழா நடைபெறுகிறது. இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இவ்விழா தேசிய நிகழ்ச்சியாக ஜனவரி 27-ம் தேதி இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை அகில இந்திய வானொலியில் நேரலையாக ஒலிபரப்பப்படும். ஜனவரி 26-ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ள தொடக்க விழாவில் சபா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்" என்றார்.
முன்னதாக, வியாழக்கிழமை நடந்த பந்தல் கால் நடும் விழாவில் சபா அறங்காவலர்கள் சி. மிதுன் மூப்பனார், எம்.ஆர். பஞ்சநதம், டெக்கான் என்.கே. மூர்த்தி, என்.ஆர். நடராஜன், உதவிச் செயலர் டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.