Published : 18 Nov 2023 02:51 PM
Last Updated : 18 Nov 2023 02:51 PM

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அண்ணாமலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை மீது ஏறி சென்று தீபத்தை தரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு பெற்றதும், அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் நேற்று கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 23-ம் தேதி மகா தேரோட்டமும், 26-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன. இதற்காக, 1,000 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படவுள்ளன. மகா தீபத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தொடர்ந்து தரிசிக்கலாம்.

2,700 பேருந்துகள், 21 ரயில்கள்... கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கடந்த ஆண்டு 34 லட்சம் பக்தர்கள் வருகை தந்த நிலையில், இந்தாண்டு 40 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கோயில் உட்பிரகாரங்கள், கிரிவலப் பாதை மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் என 210 இடங்களில் குடிநீர் மற்றும் 119 இடங்களில் கழிப்பறை வசதி செய் யப்படவுள்ளன. 1,160 பேருந்துகள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், 12,400 கார்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு 59 கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,700 சிறப்பு பேருந்து கள் மூலமாக 6,832 நடைகள் இயக்கப் படவுள்ளன. சென்னை, வேலூர், விழுப்புரம் மார்க்கங்களில் இருந்து 21 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதை வரை வருவதற்கு 180 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில், பக்தர்கள் இலவசமாக பயணிக்கலாம். தனி நபருக்கு 2.5 கி.மீ., வரை ரூ.30, அதிகபட்சமாக ரூ.50 என ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

623 கண்காணிப்பு கேமரா: கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் தலா 3 சிறப்பு மருத்துவர்களுடன் 3 மருத்துவ குழுக்கள், கிரிவலப் பாதையில் 82 நிலையான மருத்துவ குழுக்கள், 20 ஆம்புலன்ஸ்கள் (108), 15 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படவுள்ளன. கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்கு 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப் படவுள்ளனர். கோயில் அருகே மற்றும் கிரிவலப் பாதையில் 26 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படவுள்ளன. இதில், 600 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அண்ணாமலை பகுதியில் 23 இடங்கள் பாதிக்கக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளதால், 150 வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர். கோயிலில் 136, நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் 487 என மொத்தம் 623 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. 57 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்களும், 85 இடங்களில் காவல் உதவி மையங்களும் அமைக்கப்படவுள்ளன.

4 நாட்களுக்கு மாட்டு சந்தை: 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை, மலையேறி சென்று தரிசிக்க 2,500 பக்தர் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடையாள சீட்டு வழங்கப்படும். கோயில் வளாகம், தற்காலிக பேருந்து நிலையம் உட்பட 24 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. 101 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மகா தீப நாளில், கோயில் உள்ளே செல்ல, பக்தர் களுக்கு ‘சிப்’ பொருத்தப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, செங்கம் சாலை யில் வரும் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மாட்டு சந்தை நடைபெற உள்ளது.

3,225 தூய்மை பணியாளர்கள்: ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் என மொத்தம் 4 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படவுள்ளன. கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய, அவர்களது கைகளில் ‘ரிஸ்ட் பேண்ட்’ கட்டப்படவுள்ளன. தீபத் திருவிழாவையொட்டி தூய்மைப் பணியில் 3,225 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், குப்பை மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 650 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவுள்ளன. 33 உயர்மின் கோபுரங்கள் மற்றும் 1,218 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x