Last Updated : 12 Jan, 2018 04:24 PM

 

Published : 12 Jan 2018 04:24 PM
Last Updated : 12 Jan 2018 04:24 PM

பொங்கல் நாளில்... மங்கலம் பொங்கட்டும்!

உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னதத் திருநாள்... பொங்கல் நன்னாள்! தை மாதம் தொடங்குவதற்குள் அறுவடை எல்லாம் முடிந்துவிடும். அறுவடை ஆனதை வைத்து, அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் தெய்வம் சூரிய பகவான்.

அன்றைய தினம், காலையில் எழுந்ததும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். இந்த முறை ஞாயிற்றுக் கிழமை மாலையில்தான் மாதம் பிறக்கிறது. எனவே மாலை 4 மணிக்குத்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

புதிய பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.

பொங்கல் பொங்கி வழியும் போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரலெடுத்து கூவி, வழிபடுவார்கள். சில இடங்களில் பொங்கல் பொங்கி வழியும் திசையை வைத்து, ‘நல்லது நடக்குமா? என்று தீர்மானிப்பார்கள். சமையல் முடிந்ததும், நைவேத்தி யப் பொருட்களையும் வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும். சூரியனே பிரதான தெய்வம் இன்று. மேலும் ஞாயிற்றுகிழமை அதுவுமாக பொங்கல் வருகிறது. மாதமும் பிறக்கிறது.

முன்னதாக, கணபதி பூஜையை முடித்துக் கொண்டு பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து அந்த இடத்துக்கு அழகூட்டலாம். சாந்நித்தியம் பெருக்கலாம்!

தலைவாழை இலையில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடுகிற வழக்கம் சில ஊர்களில் உண்டு. அப்போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள். பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானையையோ, சாதம் வடித்த பாத்திரத்தையோ காலி செய்யக் கூடாது என்பது ஐதீகம்!

பொங்கலுக்கு மறுநாள்... கணுப் பண்டிகை! பெண்களுக்கு உரிய பண்டிகை இது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ கணுப்பிடி வைப்பார்கள்.

முன்னதாக, கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்ளவேண்டும். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் .

ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றி ஆராதனை செய்யவேண்டும்.

வெற்றிலை,- பாக்கு,பழம்,தேங் காய், கரும்பு, மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் தயாராக வைத்துக் கொள்ளவும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உதாரணத்துக்கு அன்று திங்கட்கிழமை. அதாவது 15ம் தேதி. ராகுகாலம் காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம் காலை 10.30 முதல் 12 மணி வரை!

அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுங்கள். பிறகு கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்- பூனை முதலான பிராணிகள் எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும் அதாவது சித்ரான்னங்களும் அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார். .

கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது (கணுப்பிடி). ஆதலால், ‘‘உடன்பிறந் தவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக, செளக்கியமாக இருக்க வேண்டும்!’’ என்று வேண் டிக் கொள்ளுங்கள். ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்று பழமொழியே உண்டு! கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்தப் பழமொழியின் அர்த்தம்! .

பிறந்த வீட்டுச் சீராகப் பெண்களுக்குப் பணமோ, துணியோ வழங்குவார்கள். உள்ளூரிலேயே இருந்தால், , தாய் வீட்டுக்குப் போய் மதிய உணவு சாப்பிடுவார்கள்!

ஆக, பொங்கலை குடும்பத்தாருடனும் அக்கம்பக்கத்தாருடனும் உறவுகளின் மேன்மையின் பொருட்டும் கொண்டாடுங்கள்.

பொங்கும் மங்கலம், உங்கள் வீட்டில் பொங்கி வழியட்டும். பொங்கலோ பொங்கல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x