Published : 14 Dec 2017 12:12 PM
Last Updated : 14 Dec 2017 12:12 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: விருச்சிகம்

ர்முனையாக இருந்தாலும், போர்முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்கும் நீங்கள், எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்கள். இதுவரை ஜென்மச் சனியாய் அமர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதைப் போல முடக்கி வைத்தவர். 19.12.2017 முதல் 26.12.2020 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார்.

இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் வந்து அமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். ஒரு பக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு தகுந்த செலவுகளும் இருந்துகொண்டேயிருக்கும்.

சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்குக் கண்ணாடி அணியக்கூடும். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்து போகும். வாக்கு ஸ்தானத்தில் சனி நுழைந்திருப்பதால் முடிந்த வரை அநாவசியப் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது.

சிலருக்கு நீங்கள் நல்லதே சொன்னாலும் அதை தவறாகப் புரிந்துக் கொண்டு வம்பில் சிக்க வைப்பார்கள். எனவே இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. குடும்பத்திலும், கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடும். சந்தோஷமாக ஓர் இடத்துக்குப் போக வேண்டுமென்று திட்டம் போட்டுக் கிளம்பினால் ஏதாவது சங்கடம் எதிர்பாராமல் குறுக்கே வரும்.

வெளி வட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரை சொல்லி நெருக்கடிக்கு உள்ளாக்காதீர்கள்.

சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரர்கள் நினைப்பார்கள். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019, 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் மனைவிவழி உறவினர்களுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் பழைய சொந்தங்கள் தேடி வரும்.

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் பால்ய நண்பர்கள் உங்களை வந்து சந்திப்பார்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019, 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும்.

மாணவ, மாணவிகளே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வப்போது விடைகளை எழுதிப் பாருங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாடும்போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள். தலைமை உங்களின் செயல்களை உற்று நோக்கும். அடிக்கடி தொகுதிப் பக்கம் போய் நிலவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். புதிய இளைய கலைஞர்கள் மூலமாக வெற்றியடைவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பரிசு, பாராட்டுகள் உண்டு.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள்.

உத்தியோகத்தில் சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். இந்த சனிப் பெயர்ச்சி ஒதுங்கியிருந்த உங்களை வெளியுலகத்துக்கு அழைத்து வருவதுடன் வருங்கால வாழ்வுக்கு அடித்தளம் இடுவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை, குன்றத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீகந்தழீஸ்வரரையும் ஸ்ரீநகைமுகைவல்லியையும் வழிபடவும். பிரதோஷ நாளில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பாலாபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். வாழ்வு சிறக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x