Last Updated : 30 Nov, 2017 12:48 PM

 

Published : 30 Nov 2017 12:48 PM
Last Updated : 30 Nov 2017 12:48 PM

திட்டை குரு பகவான் கோயிலில்... தலம் தீர்த்தம் மூர்த்தம்... விசேஷம்!

பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆஸ்ரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் என்றும் அழைக்கப்படுகிறது.

வசிஷ்ட முனிவர், க்ருதயுகத்தில் இந்தத் தலத்துக்கு! பலாஸவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார், ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்... இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாக வனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார். துவாபர யுகத்தில், வில்வவனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

அதேபோல், தீர்த்தங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் போற்றப்படுகின்றன. திட்டை தலத்தில், பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகியவை உள்ளன. பசு தீர்த்தத்தின் ஒரு துளி நீரானது, நம் சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது என்கிறது ஸ்தல புராணம்.

சூல தீர்த்தமானது, சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து, சிவனாரின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ளச் செய்யும் வல்லமை கொண்டது.

திருமால், தன் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதே சக்கர தீர்த்தம். ஸ்ரீசக்கரத்தின் வலிமையையும் மகிமையையும் நாம் அறிவோம். அதற்கு இணையாக இருந்து சர்வ வல்லமைகளையும் தரவல்லது, தீயசக்திகளை அழித்து சகல யோகங்களும் தரக்கூடியது இந்த சக்கர தீர்த்தம் என்று போற்றுகிறார்கள் ஞானிகள்.

அடுத்து... மூர்த்தம்! புராணங்களிலும் புராதனக் குறிப்புகளிலும் கல்வெட்டுகளிலும் ஸ்வாமிக்கு இருக்கிற ஏகப்பட்ட திருநாமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதட்சிண குடீத்வீப க்ஷேத்திரேஸ்வரர் என்று திருநாமம் ஈசனுக்கு. அதாவது தென்குடித் திட்டை தலத்தின் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார் சிவனார்.

சுயம்பு மூர்த்தம் என்பதால், தானே தோன்றியவர் என்பதால், ஸ்ரீஸ்வயம்பூதேஸ்வரர் எனும் திருநாமமும் ஈசனுக்கு உண்டு. வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என்றும் பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான்.

தவிர, ஸ்ரீஅனந்தீஸ்வரர், ஸ்ரீதேனுபுரீஸ்வரர், ஸ்ரீரதபுரீஸ்வரர், ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் எனும் பெயர்களும் திட்டை சிவனாருக்கு உண்டு என்கின்றன குறிப்புகள். ஆனால் இன்றைக்கு ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயம் என்றே அரசாங்கக் கோப்புகளிலும் பக்தர்களின் மனங்களிலும் இருக்கின்றன.

அதேபோல, அம்பாளுக்கு, உமையவளுக்கு, ஸ்ரீலோகநாயகி என்றும் ஸ்ரீசுகந்த குந்தளேஸ்வரி என்றும், ஸ்ரீமங்களேஸ்வரி, ஸ்ரீமங்கலநாயகி என்றும் திருநாமங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x