Last Updated : 03 Nov, 2017 05:18 PM

 

Published : 03 Nov 2017 05:18 PM
Last Updated : 03 Nov 2017 05:18 PM

குணசீலம் கோயிலில் சுக்கிர வார வழிபாடு!

திருச்சி குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில், இன்று சுக்கிர வார பூஜை சிறப்புடன் நடைபெற்றது.

திருச்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். இங்கே ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் திருமால். திருப்பதிக்கு இணையான திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

மனநலம் குன்றியவர்கள் குணம்பெற வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதம், இங்கே பிரசித்தம். குணசீல மகரிஷி வழிபட்டு, திருமலை திருப்பதி பெருமாளே காவிரிக் கரையில் வந்து மகரிஷிக்கு தரிசனம் தந்ததாக ஐதீகம்!

இங்கே, சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையிலும் சனிக்கிழமையிலும் பெருமாளைத் தரிசிப்பது விசேஷம். சுக்கிர வார சிறப்பு பூஜைகள் காலையும் மாலையும் நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

குணசீலம் பெருமாளுக்கு, காலையில் சிறப்பு பூஜைகளும் விசேஷ ஆராதனைகளும் செய்யப்பட்டன. துளசி மாலை சார்த்தி பக்தர்கள் வணங்கி வழிபட்டார்கள். இதையடுத்து உச்சிகால பூஜையிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நாளில், பெருமாளை வணங்கினால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x