Last Updated : 27 Oct, 2017 03:46 PM

 

Published : 27 Oct 2017 03:46 PM
Last Updated : 27 Oct 2017 03:46 PM

மனோபலம் தருவார் குணசீலம் பெருமாள்!

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். காவிரிக் கரையில் அமைந்து உள்ள சின்னஞ்சிறிய கிராமம். இந்த ஊரில் மிக எளிமையாய், அதேசமயம் வெகு அழகுடன் கோயில் கொண்டிருக்கிறார் பெருமாள்!

இந்தத் தலத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. ஆமாம்... திருப்பதி பெருமாளின் திருநாமம்தான் இவருக்கும். ஏனென்றால், திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்றே குணசீலம் போற்றப்படுகிறது.

ஆலயம் சிறிதுதான். மிகப்பெரிய கட்டுமானங்களெல்லாம் இல்லைதான். அவ்வளவு ஏன்... தாயாருக்கு தனிச்சந்நிதியோ பரிவார தெய்வங்களின் சந்நிதியோ இங்கே இல்லைதான். ஆனாலும் இந்தப் பெருமாளின் சாந்நித்தியத்தை உணர்ந்து ஈர்க்கப்பட்டு எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்!

தன்னை அறிவதற்காகவும் உலக மக்களின் நன்மை கருதியும் முனிவர் பெருமக்கள், மகரிஷிகள், ஞானிகள் தபஸ் செய்வது வழக்கம். அப்படி குணசீலன் எனும் மகரிஷி, கொள்ளிடக்கரைக்கு வந்தவர், இங்கே அமைந்திருந்த இயற்கைச் சூழலை உணர்ந்து, கரையையொட்டி ஆஸ்ரமம் அமைத்துத் தங்கினார். பர்ணசாலை அமைத்தார். இங்கே பெருமாளை நோக்கி தவம் இருக்கத் துவங்கினார்.

திருப்பதி ஏழுமலையானின் மீதும் அவரின் பேரழகின் மீது மாறாபக்தி கொண்டிருந்த மகரிஷிக்கு, அந்த வேங்கடவனே நேரில் வந்து தரிசனம் தந்தருளினார்.

மகரிஷியின் கடும் தவத்தால், தவத்தின் பலனால் பெருமாளே அங்கு வந்து எழுந்தருளியதால், அந்த இடம் புண்ணிய க்ஷேத்திரமானது. அந்த ஊருக்கு மகரிஷியின் பெயரால், குணசீலம் என்றே அழைக்கப்பட்டது.

தல்பயா எனும் மகா முனிவர் அந்தக் காலத்தில் வாழ்ந்தார். இறைவனை அடையும் வழியை அறிந்து, அது தொடர்பாக ஏராளமான சீடர்களை உருவாக்கி, அவர்களுக்கு தபஸ் செய்வதையும் கடவுளை வழிபடும் முறையையும் கற்றுக் கொடுத்தார். அப்படி அந்த மகா தபஸ்வியிடம் கற்றறிந்தவர்தான் குணசீல மகரிஷி. குருவிடம் இருந்து கற்றறிந்த வித்தைகளையும் பெற்றுத் தெளிந்த ஞானத்தையும் கொண்டு, திருமாலைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.

பெருமாள், ‘உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். ‘இந்த உலக மக்கள் நன்றாக வாழவேண்டும். சோழ தேச மக்கள் அனைவரும் நோய் நொடியில்லாமல், மனதில் எந்தக் கிலேசமும் இல்லாமல் வாழ வேண்டும். அதற்காக, தாங்கள் இங்கே இந்தத் திருவிடத்தில் எழுந்தருளவேண்டும். இங்கேயே இருந்து, மக்களின் மன நலம் காக்கவேண்டும்’ என வேண்டினார்.

அப்படியே ஆகட்டும் என அருளினார் வேங்கடவன். அதுமட்டுமின்றி, அங்கேயே கோயில் கொண்டு, ‘திருப்பதிக்கு வர இயலாதவர்கள், இங்கே வந்து என்னைத் தரிசித்தாலே, திருப்பதிக்குச் சென்று வந்த பலனும் புண்ணியமும் கிடைக்கச் செய்வேன்’ எனத் தெரிவித்தார் திருமால். எனவே குணசீலம் தலத்தின் இறைவன் திருநாமம் பிரசன்ன வேங்கடாசலபதி என அமைந்தது என்கிறார் பிச்சுமணி பட்டாச்சார்யர்.

புதன் மற்றும் சனிக்கிழமைகளில், திருவோண நட்சத்திர நாளில், வியாழக்கிழமைகளில் இங்கு வந்து பெருமாளை ஸேவிப்பது மிகுந்த பலன்களைத் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம்.

பெருமாளின் திருக்கரத்தில் உள்ள செங்கோல், விசேஷமானது. இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

வியாழக்கிழமை என்பது குரு வாரம். இங்கே பெருமாளுக்கு வியாழக்கிழமைகளில், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது, காண்பதற்கு அரிதான ஒன்று. அதேபோல், உச்சிகால பூஜையின் போது, பெருமாளின் துளசி தீர்த்தத்தை வந்திருக்கும் பக்தர்களின் முகத்தில் தெளிப்பார்கள். இதனால் தீய சக்தி விலகும். மனதில் தெளிவு பிறக்கும். முகத்தில் தேஜஸ் கூடும் என்பது ஐதீகம்.

இந்தத் தீர்த்தத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று, வீடு முழுக்கத் தெளித்துப் பிரார்த்தித்தால், வீட்டில் உள்ள பீடை நிலை விலகி ஓடும். சுபிட்சம் இல்லத்தில் குடிகொள்ளும். சகல சம்பத்துகளும் கிடைத்து இனிதே வாழச் செய்வார் குணசீலம் பெருமாள் என்று சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x