Published : 06 Dec 2014 12:18 PM
Last Updated : 06 Dec 2014 12:18 PM

‘மெஜாரிட்டி’ ஆட்சியில்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

எங்களது மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒரு பைசாகூட மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. உங்கள் மெஜாரிட்டி ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ஸ்டாலின் நேற்று கூறியதாவது:

எங்கள் கட்சி உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசும் போது, தமிழகத்தை 5 முறை ஆட்சிசெய்த கருணாநிதிக்கு சட்டம் பற்றி தெரிய வில்லை என்றார்.

அவர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவர் அதை கேட்கவில்லை. தொடர்ந்து வலியுறுத்தியதால், வெளியேற் றப்பட்டுள்ளோம். அமைச்சர் பேசும்போது திமுக அரசை ‘மைனாரிட்டி அரசு’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.

இதைத் தொடர்ந்து நான் பேசும் போது, ‘எங்களது மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒரு பைசாகூட மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. உங்கள் மெஜாரிட்டி ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதே’ என்றேன். மெஜாரிட்டி ஆட்சி என்பதோடு சேர்த்து நான் சொன்ன வார்த்தை, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப் பட்டது. அதேபோல, ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்பதையும் நீக்குமாறு வலியுறுத்தினோம். ஆனால், நீக்கவில்லை. இது சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x