Published : 11 Dec 2014 10:29 AM
Last Updated : 11 Dec 2014 10:29 AM

தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்சினைக்கு கச்சத் தீவை மீட்பதுதான் தீர்வாக இருக்கும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து, 2 படகுகளில் கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களும், புதுவை காரைக்கால் மீன்பிடி தளத்திலிருந்து சென்ற 14 தமி ழக மீனவர்களும் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்களையும், மீனவர்களுக்கு சொந்தமான 79 படகுகளையும் மீட்கத் தேவை யான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தி, கடந்த 5-ம் தேதி, தமிழக சட்டப்பேரவை யில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

படகுகளை விடுவிக்காத இலங்கை அரசின் செயல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் பல 6 மாதங்களுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் மோசமாக சேதமடைந் துள்ளன.

தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணை பகுதியில், அமைதியாக மீன்பிடித் தொழிலை செய்யும்போது, கைது செய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க இலங்கை தரப்பில் நடவடிக்கை எடுத்தால், தமிழகத்தில் உள்ள இலங்கை மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளும். இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலருக்கு கடந்த 6-ம் தேதி தமிழக அரசு தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிப்பதில் இலங்கை அரசின் செயல்பாடுகள், உள்நோக்கம் கொண்டதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது.

கடந்த ஜூன் 3-ம் தேதி பிரதமரை சந்தித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அளித்த மனுவில், மீனவர்களின் மாற்று மீன்பிடி தொழிலுக்கு ஏற்றவாறு ரூ.1,520 கோடியும், வருடாந்திர பராமரிப்புக்கு ரூ.10 கோடியும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாற்று மீன்பிடித் தொழிலுக்கு சிறப்புத் தொகையை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கினால், அது உணர்வுபூர்வமான இந்தப் பிரச்சினைக்கு ஒரு நீண்டகால தீர்வாக இருக்கும். கச்சத்தீவை மீட்பது நீண்டகால தீர்வாக இருக்கும் என்பதால், இப்பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 66 மீனவர்கள் மற்றும் 81 மீன்பிடி படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x