Last Updated : 25 Dec, 2014 10:07 AM

 

Published : 25 Dec 2014 10:07 AM
Last Updated : 25 Dec 2014 10:07 AM

கிறிஸ்து பிறப்பில் மறைந்திருக்கும் தரிசனம்

ரோமானியர்களின் ஆட்சியதிகாரத்துக்கு உட்பட்ட யூதேயாவில் பெத்லஹேம் ஒரு சிறு நகரம். அன்று யூதேயா என்று அழைக்கப்பட்ட தேசமே இன்று பாலஸ்தீனம். அதேபோல் இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் தேசம் அன்று கலிலேயாவாக இருந்தது. இன்று இஸ்ரேலில் ஒரு மாநகரமாக இருக்கும் நாசரேத் அன்று சிற்றூர். அங்கே தன் மனைவி மரியாளுடன் வசித்துவந்தார் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப். அவரது சொந்த ஊர் பெத்லகேம். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

அப்போது ரோம அரசனாக ஆட்சி செய்த அகுஸ்து ராயன் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தான். எனவே குடிமதிப்புப் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தன் மனைவி மரியாளை ஒரு கோவேறு கழுதையில் அமரவைத்து நாசரேத்தூரிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு பெத்லஹேம் வந்து சேர்ந்தார். ஆனால் இவர்களைப் போலவே குடிமதிப்பு எழுத அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து மக்கள் திரண்டுவிட்டனர்.

அப்போது பிரசவ வலியால் மரியாள் துடிக்க ஆரம்பித்தார். ஊரின் பொதுச் சத்திரத்திலும் கூட்டம் நிரம்பிவழிந்தது. அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்ட ஆரம்பித்தார் யோசேப். கதவைத் திறந்தவர்கள் கழுதையில் அமர்ந்திருக்கும் கர்ப்பிணியைக் கண்டதும் கதவை மூடிக்கொண்டார்கள்.

ஒருவர் மட்டும் அந்தத் தம்பதியின் உள்ளம் நோகாமல் பதில் தந்தார். “ உறவினர்களால் வீடு நிறைந்துவிட்டது, நீங்கள் விரும்பினால் தொழுவத்தின் முன்னணையில் தங்கிக் கொள்ளுங்கள்”. என்றார். முன்னணை என்பது கால்நடைகளுக்கான வைக்கோலும், தீவனத் தொட்டிகளும் வைக்கப்படும் சிறு இடம்.

இடம் கிடைத்தது

அந்தக் கருணை வார்த்தை களைக் கேட்டதும் யோசேப்புவின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் அகன்றது. மரியாளைச் சுமந்து நின்ற கழுதையை அவசர அவரசமாகத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே தன் மனைவிக்குத் தாயாகவும் மாறினார் அந்த மாமனிதர்.

ஆடுகளும் மாடுகளும் கழுதைகளும் இவர்களைக் கண்டு மிரளவில்லை. வெண்பனியும், வின்மீன்களும் அந்தப் புனித இரவில் விழித்திருந்தன. துருவ நட்சத்திரங்கள் அதற்கு முன் தோன்றியிருக்கவில்லை. வரலாற்றை முன்னும் பின்னுமாகப் பிரித்த இறைமகன் இயேசு பிறந்தார். உலகின் முதல் துருவநட்சத்திரம் வானில் தோன்றி ஒளிர்ந்தது.

இடையர்களுக்கு அடையாளம்

தாய் மரியாளின் கைகளுக்குள் ஒளிவீசிய அக்குழந்தையைத் துணிகளில் பொதிந்து, வைக்கோல்கள் நிரப்பிய தீவனத் தொட்டியில் கிடத்தினர் பெற்றோர். குழந்தை இயேசுவை முதலில் காண வந்தவர்கள் எளிய இடையர்குடி மக்கள். தங்கள் மந்தைகளோடு அவற்றைக் காக்கும் விதமாக வெட்ட வெளிகளில் கூடாரம் அமைத்து வாழ்ந்துவந்தார்கள்.

வீடுகள்கூட இல்லாத அந்த மக்கள் மத்தியில் தோன்றினார் ஒரு வான தூதர். ஒளி வீசிய அவரைப் பார்த்து இடையர் மக்கள் அஞ்சினர். தேவதூதர் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள், எல்லா மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்; உங்களுடைய மீட்பராகிய கிறிஸ்து இன்று தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். அந்தச் சிறு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு, தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

உடனடியாக புறப்பட்டுப்போன இடையர்கள், தெய்வ பாலனைக் கண்டுகொண்டார்கள். தாங்கள் கண்டதையும் கேட்டதையும் தங்களுக்குத் தேவதூதன் அறிவித்தபடியே இருந்ததால், கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடியவாறு மந்தைகளுக்குத் திரும்பிப் போனார்கள்.

தாய் மரியாளின் கைகளுக்குள் ஒளிவீசிய அக்குழந்தையைத் துணிகளில் பொதிந்து, வைக்கோல்கள் நிரப்பிய தீவனத் தொட்டியில் கிடத்தினர் பெற்றோர். குழந்தை இயேசுவை முதலில் காண வந்தவர்கள் எளிய இடையர்குடி மக்கள். தங்கள் மந்தைகளோடு அவற்றைக் காக்கும் விதமாக வெட்ட வெளிகளில் கூடாரம் அமைத்து வாழ்ந்துவந்தார்கள். வீடுகள்கூட இல்லாத அந்த மக்கள் மத்தியில் தோன்றினார் ஒரு வான தூதர். ஒளி வீசிய அவரைப் பார்த்து இடையர் மக்கள் அஞ்சினர்.

தேவதூதர் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள், எல்லா மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்; உங்களுடைய மீட்பராகிய கிறிஸ்து இன்று தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். அந்தச் சிறு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு, தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார். உடனடியாக புறப்பட்டுப்போன இடையர்கள், தெய்வ பாலனைக் கண்டுகொண்டார்கள். தாங்கள் கண்டதையும் கேட்டதையும் தங்களுக்குத் தேவதூதன் அறிவித்தபடியே இருந்ததால், கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடியவாறு மந்தைகளுக்குத் திரும்பிப் போனார்கள்.

இயேசுவின் பிறப்பு எதற்காக?

பூமியைப் படைத்த கடவுள், தன் முதல் மகனாக ஆதாமைப் படைத்தார். அவனோ பாவம் செய்தான். அதனால் அவனுடைய பிள்ளைகள் பாவத்தின் வழித்தோன்றல்களாகப் பல்கிப் பெருகினார்கள். கடவுள் தந்த தூய வாழ்க்கைச் சட்டங்களை மீறும் பாவ வாழ்வையே வாழ்ந்து மடியத் தொடங்கினர். சாத்தான் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தான்.

ஆதாமின் சந்ததியாகிய மனித இனம் பாவத்திலிருந்து ரட்சிக்கப்பட வேண்டும். பாவம் செய்வதற்கு முன் பரிபூரணத் தன்மையுடன் இருந்த ஆதாமின் உயிருக்கு இணையான மற்றொரு பரிபூரண மனித உயிர் இந்த பூமிக்குத் தரப்படவேண்டும். இதற்குக் கடவுளே உறுதி தந்தார். அவரே இயேசு. இதற்காகவே மனிதனால் அல்லாமல் இயேசுவை அற்புதமான வழியில் பாவமின்றி ஒரு கன்னியின் வயிற்றில் பிறக்கும்படி கடவுள் வழிவகை செய்தார். இதற்காகவே எதிரிகள் தம் மகன் இயேசுவைக் கொலை செய்வதற்கும் இடமளித்தார்.

ஆதாம் இழந்ததை பாவமுள்ள மனிதர் திரும்பவும் பெறுவதற்கான வாசலை இயேசு வழியே கடவுள் திறந்து வைத்தார். தன் தந்தையின் திட்டத்தை இயேசு இவ்வாறு விளக்கினார்; “ நானே ஜீவனும் உயிர்த்தெழுதலுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் இறந்தாலும் வாழ்வான்; உயிருடனிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றும் இறக்காமல் இருப்பான்” (யோவான் 11:25). என்ற அசாதாரண வாக்குறுதியை இயேசு அளித்தார்.

உண்மையின் திறவுகோல்

பிரபஞ்சத்தையும் இப்பூலகையும் ஆளும் அதிகாரம் அவற்றைப் படைத்த தன் பரலோகத் தந்தைக்கே இருக்கிறது என்று நிரூபிக்க இயேசு விரும்பினார். பூமியில் பிறப்பு முதல் தன் இறப்புவரை நீதிமானாக, கீழ்படிதல் கொண்டவராக, உண்மையின் திறவுகோலாக வாழ்ந்து காட்டியதன் மூலம் தன் படைப்புகளை ஆளும் தன் தந்தையின் மாட்சிமைக்குத் தாம் கட்டுப்பட்டிருக்கும் முன்மாதிரியை மனித குலத்துக்குக் காட்டினார்.

கடவுளுடைய எதிரியாகிய சாத்தானின் கைப்பிடியில் ஆட்டிவைக்கப்பட்ட தம் எதிரிகளால் கொல்லப்படுவதற்கு முன், பலிக்குரிய மரணத்தை ஏற்று அனுபவிக்கத் தாம் மனத் தேர்ச்சி பெற்றவராக இருந்தது எப்படி என்பதை இயேசு தெளிவாக விளக்கிக் கூறினார். “நான் என் பரலோகத் தந்தையிடம் அன்பாயிருக்கிறேன் என்பதை இவ்வுலகம் அறிய வேண்டும்” (யோவான் 14:31) என்று தெளிவாகச் சொன்னார்.

முதல் மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் இப்படிப்பட்ட அன்பைக் கடவுளுடன் பேணியிருந்தால் அவர்களைக் கெடுத்த சாத்தானின் சோதனையில் உண்மையுள்ளவர்களாக வென்று காட்டியிருக்க முடியும். ஆனால் இம்முறை இயேசுவிடம் சாத்தான் தோற்றுப்போனான். அவர் உண்மையின் ராஜாவாக இருந்தபடியால், அவர் பொல்லாத தூதனாகிய சாத்தானைப் பொய்யனாக நிரூபித்தார்.

பிறப்பின் வழியே மறுபிறப்பு

இன்று மீண்டும் நமக்காகப் பிறந்திருக்கும் இயேசு தாம் பூமியில் பிறந்ததற்கான முக்கியக் காரணத்தை அவர் வாழ்ந்த காலத்தில் இவ்வாறு கூறுகிறார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன்” (யோவான் 18:37). கடவுளுடைய ஆட்சி, நீதியும் சத்தியமும் கொண்டது. அதில் நீங்களும் பங்கேற்க விரும்பினால், நீங்களும் உண்மையின் சாட்சியாக வாழ முடியுமா என்று சிந்தியுங்கள்.

உங்கள் வாழ்வு பொய்யானதென்றால், இயேசுவின் இந்தப் பிறந்தநாளில் நீங்களும் புது மனிதனாகப் பிறக்க உங்களுக்குத் தேவையானது பாவங்களை விட்டு வெளியேறும் மனமாற்றம். இதுவே கிறிஸ்து பிறப்பில் மறைந்திருக்கும் தரிசனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x