Published : 25 Nov 2014 12:23 PM
Last Updated : 25 Nov 2014 12:23 PM
நேபாளத்தில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்துவதற்கான பேச்சு நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மோடியுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் நேபாளம் செல்கின்றனர்.
சார்க் நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே சார்க் மாநாட்டின் நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது நேபாள பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சார்க் உச்சி மாநாட்டில் நான் பங்கேற்பது முதல் முறை. எனது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் வந்து சிறப்பித்தனர். அப்போதே அவர்களிடம் பல விஷயங்கள் குறித்து பேச முடிவு செய்தேன்.
அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்துவதே எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT