Last Updated : 14 Jul, 2018 07:31 AM

 

Published : 14 Jul 2018 07:31 AM
Last Updated : 14 Jul 2018 07:31 AM

கோவை தனியார் கல்லூரி மாணவி கீழே விழுந்து பலியான விவகாரம்; பேரிடர் மேலாண்மை ஆணைய பயிற்சியாளர் கைது: 2 தனிப்படைகள் விசாரணை; பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீஸ்

கோவை தனியார் கல்லூரியில் மாணவி உயி ரிழந்த விவகாரத்தில், பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சியளித்தவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, கல்லூரி முதல்வருக்கு பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள நரசீபுரத்தில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 8 இளநிலைப் படிப்புகளும், 5 முதுநிலைப் படிப்புகளும், ஒரு முதுநிலை பட்டயப்படிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, தலா இரு துறைகளில் எம்ஃபில், பிஹெச்டி. படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஆணைய அதிகாரி கடிதம்

இந்த நிலையில், இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண் மைப் பயிற்சி முகாம் நடத்த நிர்வாகம் திட்டமிட்டு, வணிகவியல் துறை டீன் வி.விஜயலட்சுமி மூலமாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த ஜூலை 3-ம் தேதி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி, இக்கல்லூரிக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், ‘தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 12.07.2018-ல் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்' என்றும் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று முன்தினம் அக்கல்லூரி வளாகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது, இயற்கை சீற்றங்களால் பேரிடர் ஏற்படும்போது, எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்வது என்று பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடத்தில், ஏறி இறங்குவதற்கு வசதியாக மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் கயிறு கட்டப்பட்டது. அதில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கயிற்றைப் பிடித்து கீழே இறங்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர் கள் தவறி விழுந்தால், தாங்கிப் பிடிப்பதற்கு நீளமான வலையைப் பிடித்தவாறு மாணவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். இந்தப் பயிற்சிக்காக 20 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் பங்கேற்கும்போது, அவர்கள் சற்று பதற்றத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவி தயக்கம்

முதலில் 2 மாணவிகள் கயிற்றைப் பிடித்து கீழே இறங்கினா். மூன்றாவதாக இறங்க மாணவி லோகேஸ்வரி தயார்படுத்தப்பட்டார். இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்க வேண்டும் என்பதால் அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளார். அவரை கயிற்றைப் பிடித்து இறங்கு மாறு பயிற்சியாளர் ஆறுமுகம் அறிவுறுத்தியுள்ளார். அப்போதும் மாணவி லோகேஸ்வரி தயங்கியுள்ளார். கீழே மாணவர்கள் வலையைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த பயிற்சியாளர், மாணவி வலையில் விழுவார் என்று எண்ணி அவரைக் கீழே தள்ளியுள்ளார். இரண்டாவது மாடியிலிருந்து மாணவி கீழே விழுந்தபோது, முதல் மாடியில் இருந்த சாளரத்தில் (சன்ஷேடு) பலமாக மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்து மயங்கிய மாணவியை முதலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் (63). விவசாயக் கூலி. ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர். மாணவி உயிரிழந்தது குறித்து தகவலறிந்த நல்லா கவுண்டர், ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சென்னையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை (31) கைது செய்தனர்.

வறுமையில் வாடியபோதும்...

இதுகுறித்து மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் கூறும்போது, ‘நேற்று முன்தினம் மாலை, என் மகளுடன் படிக்கும் மற்றொரு மாணவி, மகள் லோகேஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போனில் கூறினார். உடனே நாங்கள் மருத்துவ மனைக்குச் சென்று பார்த்தோம். அப்போது, லோகேஸ்வரி இறந்து விட்டதாகத் தெரிவித் தனர். எனினும், கல்லூரி நிர்வாகம் எதுவும் கூறவில்லை. உடன் படிக்கும் மாணவி கூறியிருக்காவிட்டால், இந்த சம்பவமே எங்களுக்குத் தெரிந்திருக்காது. கூலி வேலை செய்து, வறுமை நிலையில் இருந்தாலும், மகளாவது நன்றாகப் படிக்க வேண்டுமெனக் கருதி, தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தேன். அவளுடைய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது' என்றார்.

பாரதியார் பல்கலை. நோட்டீஸ்

பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ஆர்.சரவணசெல்வன் கூறும்போது, ‘பேரிடர் மேலாண்மை முகாமில் பங்கேற்ற மாணவி இறந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்றார். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி கூறும்போது, ‘மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்த பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் கள் பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

கோவையில் பயிற்சியின்போது பலியான கல்லூரி மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர் கே.பழனிசாமி, முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாணவி இறந்த செய்தி அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x